Skip to main content

“ராணுவம் என்பது சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல” - நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்

Published on 11/12/2023 | Edited on 12/12/2023
Justice SK Kaul's says army to fight enemies of the state Not to maintain law and order

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்  3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில் 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மூன்று நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “ஜம்முகாஷ்மீரில் குறைந்தபட்சம் 1980-களில் இருந்து அரசு(ராணுவம், போலீஸ்) மற்றும் அரசு சாரா அமைப்புகளால் (பயங்கரவாதி, பிரிவினைவாதி) நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை விசாரித்து, அறிக்கை வெளியிட ஒரு பாரபட்சமற்ற உண்மை மற்றும் நல்லிணக்கக் குழுவை அமைக்கவும், நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் பரிந்துரை செய்கிறேன்.

முன்னோக்கி செல்ல, காயங்கள் குணமடைய வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் செய்த தவறுகளை செயல்களை ஒப்புக்கொள்வதுதான் காயங்களைக் குணப்படுத்துவதற்கான முதல் படி. இது குறித்த வலிகளை மக்கள் உணர்கிறார்கள். ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு இணையாக, படிப்படியாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் சட்டப்பிரிவு 370ன் நோக்கம். ராணுவம் என்பது அரசின் எதிரிகளை எதிர்த்து போரிடுவதற்குதானே தவிர, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல" சட்டப்பிரிவு 370-ஐ, சட்டப்பிரிவு 367-ஐ  பயன்படுத்தி திருத்தம் செய்வது குறித்து, ஒரு நடைமுறை பரிந்துரைக்கப்படும்போது, அதைப் பின்பற்ற வேண்டும். பின்வாசல் வழியாக திருத்தம் அனுமதிக்கப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்