Skip to main content

பா.ஜ.க. ஆட்சியில் முறைகேடு; மேனாள் நீதிபதி டி. குன்ஹா தலைமையில் ஆணையம்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Justice D. Cunha headed by the commission about Malpractice in BJP government

 

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல் மற்றும் பிற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், பா.ஜ.க ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெங்களூரில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் 40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதேபோல், 2020 ஆம் ஆண்டில் பரவிய கொரோனாவை தடுக்கும் வகையில் முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அப்போதைய பா.ஜ.க அரசு வழங்கியது. அப்போது வழங்கப்பட்ட உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்கியதில் சுகாதாரத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், அந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர். 

 

இந்த நிலையில், அந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கர்நாடகா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விசாரணை ஆணையம், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, கடந்த பா.ஜ.க ஆட்சியில் சுகாதாரத்துறையில் நடைபெற்ற வரவு, செலவு சம்பந்தப்பட்ட தகவல்களில் ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதாக சட்டப்பேரவை பொது தணிக்கை குழு கர்நாடகா அரசிடம் தெரிவித்தது. அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா விசாரணை ஆணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்துக்குத் தேவையான தகவல்கள், ஆவணங்கள் வழங்க வேண்டும் எனவும், அவர்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறைக்கு கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்னும் ஓரிரு நாள்களில் அவர்கள் விசாரணையைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

 

சொத்துக் குவிப்பு வழக்கில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்றும், அவருக்கு ரூ. 100 கோடி அபராதமும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளித்தவர் ஜான் மைக்கேல் டி. குன்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்