Skip to main content

பதவியை ராஜினாமா செய்த ஜே.பி. நட்டா!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
JP nadda resigned from the post

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து ராஜ்ய சபா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜகத் பிரகாஷ் நட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டார்” என ராஜ்யசபா பொதுச் செயலாளர் பி.சி. மோடி தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் ஜே.பி. நட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா போட்டியின்றி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்