Skip to main content

தொழிலாளர்கள் ஆத்திரம்: ஒரே நாளில் 400 கோடியை இழந்த ஐஃபோன் நிறுவனம்! 

Published on 14/12/2020 | Edited on 14/12/2020
wistron

 

 

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஐஃபோன் உற்பத்தித் தொழிற்சாலை விஸ்ட்ரான். தைவான் நாட்டைச் சார்ந்த இந்த நிறுவனம், கடந்த சில மாதங்களாக, தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை.

 

தொழிற்சங்கங்கள், மூலம் சம்பளம் தரக்கோரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், அது பயனளிக்காததால், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென தொழிலாளர்கள், அத்தொழிற்சாலையை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். விஸ்ட்ரான் தொழிற்சாலையில் இருந்த, கணினிகள், வாகனங்கள், கண்ணாடிகள் என அனைத்தும் தொழிலாளர்களால் நொறுக்கப்பட்டது.  

 

இந்தநிலையில், தொழிற்சாலையில் ஏற்பட்ட வன்முறை குறித்து போலீஸில் புகாரளித்துள்ள விஸ்ட்ரான், இந்த வன்முறையால், தங்களுக்கு 437 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், வன்முறையின் போது ஆயிரக்கணக்கான ஐஃபோன்கள் திருடப்பட்டதே இந்த நஷ்டத்திற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில், விஸ்ட்ரான் தொழிற்சாலையில் நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பர், விஸ்ட்ரான் தொழிற்சாலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறியுள்ளார். மேலும், விஸ்ட்ரான் நிறுவனம், கான்ட்ராக்டர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு எடுத்துள்ளது. அந்த தொழிற்சாலை, கான்ட்ராக்டர்களிடம் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பளத்தைத் தந்து விட்டதாகவும், கான்ட்ராக்டர்கள் சம்பளத்தைத் தொழிலாளர்களுக்கு கொடுக்க தாமதப்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளது. இது பற்றி விசாரித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

 

மேலும், மூன்று நாட்களில் தொழிலாளர்களுக்கு அனைத்து நிலுவைத் தொகையையும் தந்துவிட வேண்டுமென்று, தொழிலாளர் நலத்துறை விஸ்ட்ரான் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாவும் சிவராம் ஹெப்பர் தெரிவித்துள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதா? - விளக்கமளித்த ஆப்பிள் நிறுவனம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Cell phones of opposition MPs hacked?; Explained by Apple

 

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சியினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில் அடுத்த மாதம் தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, அரசாங்கம் தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளதாக இன்று (31-10-23) காலை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, ’உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். 

 

உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்’ என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும், இதேபோன்ற செய்தி மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” என்று தெரிவித்துள்ளது.

 

 


 

Next Story

ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு, நிர்மா சோப்புகளை அனுப்பிய பிரபல ஆன்லைன் நிறுவனம்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

For those who order iPhone, the famous online company that sent soaps

 

"வாஷிங் பவுடர் நிர்மா.. வாஷிங் பவுடர் நிர்மா.. நிர்மா.. எனும் விளம்பரப் பாடலைக் கேட்டால் இப்போதும் நம்மில் பலருக்கும் இளமைக்கால நினைவுகள் கண் முன்னே வந்துபோகும். ஆனால், இந்த 'நிர்மா' ஒருவரின் வாழ்க்கையில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலங்களை முன்னிட்டு பல நிறுவனங்களும் தங்களது பொருட்களை 'சிறப்புத் தள்ளுபடியில்' விற்பனை செய்யத் தொடங்கிவிட்டது. இந்த விழாக்கால சிறப்புத் தள்ளுபடிக்கு 'ஃப்ளிப்கார்ட்', 'அமேசான்', போன்ற பெருநிறுவனங்களும் விதிவிலக்கல்ல. தீபாவளியை முன்னிட்டு மிகக் குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக, பல நூறு விளம்பரங்கள் நமது நோட்டிஃபிகேஷனை நிரப்புகின்றன. அந்தவகையில், ப்ளிப்கார்ட் நிறுவனம், 'பிக் பில்லியன் சேல்ஸ்' எனும் ஆஃபரின் கீழ் பிராண்டட் பொருட்களை, குறைந்த விலையில், குறுகிய காலத்திற்குள் விற்பனை செய்து வந்தது.

 

இதைப் பார்த்ததும், குறைந்த விலையில் ஆப்பிள் ஐஃபோன் வாங்க நினைத்துள்ளார் வாடிக்கையாளரான சிம்ரன்பால் சிங். ஆப்பிள் ஐஃபோன் 12-ஐ, ரூபாய் 51,999-க்கு ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார் சிம்ரன்பால். கடந்த அக்டோபர் 4-ம் தேதி, ஃப்ளிப்கார்ட்டில் இருந்து ஐஃபோன் வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் ஊழியர் அவரை தொடர்புகொண்டு கூறியுள்ளார். அப்போது, 'ஓபன் பாக்ஸ் டெலிவரி' முறையின் கீழ், ஃப்ளிப்கார்ட் ஊழியர் முன்னிலையிலேயே திறந்துள்ளார். அத்துடன், அதை வீடியோவாகப் பதிவும் செய்துள்ளார். ஐஃபோன் கனவுடன் பாக்சை திறந்து பார்த்தபோது, ஐந்து ரூபாய் மதிப்புள்ள இரண்டு நிர்மா சோப்புகள் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிம்ரன்பால், ஃப்ளிப்கார்ட் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், ஊழியரோ, உங்கள் OTP சொல்லுங்க எனக் கூறியுள்ளார்.

 

For those who order iPhone, the famous online company that sent soaps

 

இதனால், மேலும் கடுப்பான சிம்ரன்பால், 'ஐஃபோன் ஆர்டர் பண்ண எனக்கு சோப்புக் கட்டி வந்துருக்குனு சொல்றேன் நீங்க OTP கேட்டுட்டு இருக்கீங்க' என ஆவேசமாகப் பேசியுள்ளார். ஆனாலும், அந்த ஊழியர் OTP எண்ணை வாங்கிவிடுவதிலேயே குறியாக இருந்துள்ளார்.இதனால் சந்தேகமடைந்த சிம்ரன்பால், உடனே ஃபிளிப்கார்ட் கஸ்டமர் கேர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கியுள்ளார். ஃபிளிப்கார்ட் தரப்பில் கவலைப்படத் தேவையில்லை, உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் உங்களது ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு, உங்களது பணம் உங்கள் பேங்க் அக்கவுண்டுக்கே வந்துவிடும் எனக் கூறியுள்ளனர். ஆனாலும், தொடர் அலைக்கழிப்புக்குப் பிறகு, சுமார் 5 நாட்கள் கழித்தே பணம் சிம்ரன்பாலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.

 

இதுகுறித்து சிம்ரன்பால் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஆர்டர் செய்யும் அனைவரும் 'ஓபன் பாக்ஸ் டெலிவரி' முறையைப் பயன்படுத்துங்கள். என்னைப் போலவே எல்லாருக்கும் போன பணம் திரும்ப கிடைத்துவிடாது. ஆகையால் விழிப்புணர்வுடன் ஆர்டர் செய்யுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே பல தளங்களில் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், ஃப்ளிப்கார்ட் போன்ற ஒரு நம்பிக்கையான பெரிய நிறுவனத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பலரது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.