Skip to main content

கச்சா எண்ணெய்யை விடுவிக்கும் முயற்சிகளை இந்தியா ஆதரிக்கும் - மத்திய அரசு!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

crude oil

 

ரஷ்யா, கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீதான போரை தொடங்கியது. ரஷ்ய அதிபர் புதினின் இந்த அதிரடி முடிவு, சர்வதேச அளவில் பல்வேறு துறைகளிலும் எதிரொலித்தது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105 ரூபாயை தாண்டியது. இதனால் பெட்ரோல் -டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகள் எரிவாயு சம்பந்தமான துறைகளை மட்டும் தவிர்த்துவிட்டு ரஷ்யா மீது பொருளாதர தடைகளை விதித்தது.

 

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழ் குறைந்தது. இந்தநிலையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை விடுவிக்க தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அரசாங்கம் உலகளாவிய எரிசக்தி சந்தைகளையும், புவிசார் அரசியல் சூழ்நிலையினால் ஆற்றல் விநியோக இடையூறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தனது குடிமக்களுக்கு ஆற்றல் நீதியை உறுதிசெய்வதற்காகவும் மற்றும் நிகர பூஜ்ஜிய எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்திற்காகவும், நிலையான விலையில் எரிவாயு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க இந்தியா தயாராக உள்ளது. சந்தையில் எரிவாயு விலையின் நிலையற்றதன்மையை தணிக்கவும், கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தணிக்கவும் மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களில் இருந்து கச்சா எண்ணெய்யை வெளியிடும் முயற்சிகளை ஆதரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்தாண்டு இறுதியில் கச்சா எண்ணெய் விலையை குறைக்க இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது மூலோபாய இருப்பிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் கச்சா எண்ணெய்யை விடுவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.