Skip to main content

புனே சொகுசு கார் விபத்து; சிறுவனைக் காப்பாற்ற அடுத்தடுத்து அரங்கேறும் தில்லுமுல்லு!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Incident happened to save the boy at Pune luxury car accident

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது சிறுவன், கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்து முன்னே சென்ற பைக் மீது மோதினார். இந்த கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேந்தாந்த் அகர்வாலைப் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வேந்தாந்த் அகர்வாலைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வேந்தாந்த் அகர்வாலைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பீட்சா, பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 20ஆம் தேதி சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்தில் வேதாந்த் அகர்வால் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை விசாரித்த நீதிமன்றம், அவருக்குச் சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது. விபத்தை ஏற்படுத்தி ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, சிறுவனுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

தொடர் விமர்சனங்களின் விளைவாக, அந்தச் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் சிறுவனின் தந்தையும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான விஷால் அகர்வாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சிறுவன் வேந்தாந்த் அகர்வாலுக்கு மது வழங்கியதற்காக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடும்ப கார் ஓட்டுநரான கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்குமாறு வற்புறுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், சிறுவன் வேந்தாந்த் அகர்வாலின் தாத்தா சுரேந்திரா அகர்வாலை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், சிறுவனை காப்பாற்ற அவனது ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றி கொடுக்க தொழிலதிபர் குடும்பம் தங்களது பணபலத்தை பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பான விசாரணையில், சிறுவன் மது அருந்தியதை உறுதி செய்ய புனேவில் உள்ள அரசு மருத்துவமனையான சசூன் மருத்துவமனைக்கு சிறுவன் ரத்த பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஆனால், அந்த அறிக்கையில், சிறுவன் மது அருந்தவில்லை என அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளியானது. 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனை காப்பாற்ற அவனது குடும்பம், தங்களது பணபலத்தை பயன்படுத்தி, தடயவியல் மருத்துவர்களான அஜய் தவாடே மற்றும் ஹரி ஹர்னூர் ஆகியோரிடம் அறிக்கையை மாற்றி கொடுக்கும்படி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், அறிக்கையை மாற்றி கொடுத்து மோசடி செய்த இரண்டு மருத்துவர்களையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

புனே கார் விபத்து சம்பவம்; சிறுவனுக்குச் சாதகமாக மாறிய தீர்ப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
A minor boy to be released on Pune car accident incident

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது சிறுவன், கடந்த மே 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்து முன்னே சென்ற பைக் மீது மோதினார். இந்தக் கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேந்தாந்த் அகர்வாலைப் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வேந்தாந்த் அகர்வாலைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறுவனுக்கு  உடனடியாக ஜாமீன் வழங்கியது. இதனால், கடும் விமர்சனங்கள் எழுந்தது. தொடர் விமர்சனங்களின் விளைவாக, அந்தச் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் மற்றும்  தாத்தா சுரேந்திரா அகர்வால் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சிறுவன் வேந்தாந்த் அகர்வாலுக்கு மது வழங்கியதற்காக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிறுவனைக் காப்பாற்ற அவனது ரத்தப் பரிசோதனை அறிக்கையை மாற்றிக் கொடுக்க தொழிலதிபர் குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தி உள்ளதாகத் தகவல் வெளியானது. அதன்படி, ரத்தத்தை மாற்றி வைத்து பரிசோதனை செய்த குற்றச்சாட்டில் 2 மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், சிறுவனின் ரத்தத்திற்கு மாற்றாகச் சிறுவனின் தாயின் ரத்தத்தை மாற்றி வைத்து பரிசோதனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுவனின் தாயைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (25-06-24) மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்தி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம், ‘இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நடந்திருக்கிறது. அதனால், விபத்தை ஏற்படுத்திய சிறுவனைச் சிறார் முகாமில் அடைத்து வைத்திருக்க முடியாது. மேலும், இந்த சிறுவனை உடனடியாக சிறார் நீதி வாரியம் விடுவிக்க வேண்டும். சிறுவனின் பெற்றோர் மற்றும் அவரது தாத்தா தற்போது சிறையில் இருப்பதால், அந்த சிறுவன் அவருடைய அத்தையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்’ என்று கூறி உத்தரவிட்டுள்ளது. 

Next Story

நேருக்கு நேர் மோதிய இரண்டு கார்கள்; 11 பேர் படுகாயம்!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
2 cars head-on collision on Bangalore National Highway

ஓசூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்  சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அசோக், பாபு, திலிப் புருஷோத்தமன், மனோஜ் ஆகியோர் பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் நண்பரின் திருமணத்துக்கு சென்று திருமணம் முடிந்து கொண்டு மீண்டும் ஓசூர் நோக்கி காரில் சென்றுள்ளனர். காரை மனோஜ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். 

அந்தக் கார் கேத்தாண்டபட்டி அருகே உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் நெல்லூர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் மற்றும் இவரது தந்தை ஜெகதீஷ், தங்கராஜின் மனைவி  சரண்யா  குழந்தைகள் முகில் ஆதி, சிபியுகன் ஆகியோர் திண்டுகள் பகுதியில் இருந்து நெல்லூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். இந்தக் காரை தங்கராஜ் ஒட்டி சென்றார். அப்போது தங்கராஜ் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு எதிர் திசையில் சுரேஷ் சென்ற கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில். இரண்டு கார்களில் பயணம் செய்த 11 பேர் படுகாயங்களுடன் கார்களில் சிக்கி கொண்டனர். 

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காரில் சிக்கிக்கொண்ட 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இந்த விபத்தில் சிக்கிய இரண்டு கார்களும் சாலையின்  குறுக்கே நின்றதால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை போலிசார் மற்றும் நாட்றம்பள்ளி போலிசார் விரைந்து வந்து கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக நாட்றம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த அசோக் என்பவர் தலையில் பலத்த காயமடைந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.