Skip to main content

‘இப்போதே திருமணம் செய்துகொள்...’ - கெஞ்சிய காதலிக்கு நேர்ந்த சோகம்!

Published on 25/07/2024 | Edited on 25/07/2024
The incident of a girlfriend in karnataka

கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா (25). இவர் அந்தப் பகுதியில் நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற சவுமியா மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த சவுமியாவின் பெற்றோர், சவுமியாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால், இது குறித்து அவர்கள் கொப்பா போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சவுமியா ஸ்ருஜன் (28) என்பவரைக் காதலித்து வந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில், ஸ்ருஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், ஸ்ருஜன் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கீழ் கடன் வாங்கிய கொப்பா பகுதியைச் சேர்ந்தவர்களிடம் பணம் வசூலிக்க அடிக்கடி அங்கு சென்றுள்ளார்.

அப்போது சவுமியாவுக்கும் ஸ்ருஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் ஸ்ருஜன் வீட்டிற்கு தெரியவர, இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தக் காதலுக்கு ஸ்ருஜனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சவுமியாவிடம் பேசுவதை ஸ்ருஜன் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சவுமியா தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஸ்ருஜனிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். 

இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று ஸ்ருஜனை சந்தித்து தன்னை இப்போதே திருமணம் செய்துகொள்ளும்படி சவுமியா வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஸ்ருஜன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ருஜன், சவுமியாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி சவுமியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடித்துடித்து உயிரிழந்துள்ளார். இதைக் கண்ட ஸ்ருஜன் போலீஸுக்கு பயந்து சவுமியாவின் உடலை சிவமொக்கா பகுதியில் குழி தோண்டி புதைத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஸ்ருஜனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்