Skip to main content

மக்களவை சபாநாயகர் பதவி?; சந்திரபாபு நாயுடு கூறிய முக்கிய தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 Important information given by Chandrababu Naidu for Lok Sabha Speaker post?

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தல் பரப்புரையில், அதிக பெரும்பான்மையாக 400 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் ஏமாற்றத்தைப் பெற்றுத் தந்தது. 

543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இதற்கிடையில், பா.ஜ.கவுக்கு ஆதரவளித்த தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும்,  பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாகத் தகவல் வெளியானது. அதில், மூன்றுக்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்கள் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியானது. அதே போல், ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்றும், சபாநாயகர் பதவி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் எதிர்பார்ப்பதாகத் தகவல் வெளியானது. 

இதனிடையே, மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று (24-06-24) தொடங்கிய மக்களவைக் கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று மக்களவை தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். அதேவேளையில் மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. 

இந்த நிலையில், சபாநாயகர் பதவிக்கான தங்களில் நிலைப்பாடு என்ன என்பதைத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய சந்திரபாபு நாயுடு, “மக்களவை சபாநாயகர் தேர்தலுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடன் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் சபாநாயகர் தேர்தல் குறித்து அமித்ஷா என்னிடம் பேசினார்.

ஆனால், அதற்கு நான் தெலுங்கு தேசம் கட்சிக்குச் சபாநாயகர் பதவி தேவையில்லை, அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன். மாநிலம், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பல உதவிகளைச் செய்யுமாறும் கூறினேன். ஆந்திரா மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியைக் கொடுத்துள்ளனர். அதனால், மேலும் பதவி கேட்டால் மாநில நலன் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம்” என்று கூறினார். முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க பரிந்துரைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்