Skip to main content

தேசியப் போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை!

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
Honorable Prime Minister Modi at the National Memorial

நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெற உள்ளன. இதில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு பெண்களை மையமாக வைத்து, இந்திய இசைக்கருவிகளுடன் 100 பெண் கலைஞர் பங்கேற்க உள்ளனர். பிரான்ஸ் அணியினரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 75 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

vck ad

இந்நிலையில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் மோடி தேசியப் போர் சின்னத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தேசியப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதிகள், மத்திய அமைச்சர்கள்  உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்