கரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்தி, கரோனா மருந்து கண்டுபிடிப்பில் முதல் வெற்றியைச் சந்தித்துள்ளனர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் 12,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்தி, கரோனா மருந்து கண்டுபிடிப்பில் முதல் வெற்றியைச் சந்தித்துள்ளனர் இந்திய ஆராய்ச்சியளர்கள். குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் (ஜிபிஆர்சி) விஞ்ஞானிகள் கரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதாகக் குஜராத் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வைரசின் தோற்றம், மருந்து தயாரிப்புக்கான வேதிப்பொருட்களைக் கண்டறிவது, மற்றும் தடுப்பூசி கண்டறிதல் ஆகியவை சாத்தியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.