![Kaganyan project trial success over hurdles](http://image.nakkheeran.in/cdn/farfuture/5VT1uP1Bzuvuk7-ja7jnMSW5vWDLmnYFfhbpaZjp_uY/1697865580/sites/default/files/inline-images/gaganyaan-rocket_0.jpg)
இதுவரையில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வகையில் இந்தச் சாதனையைப் படைக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதனையடுத்து ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ அண்மையில் வெளியிட்டிருந்தது. ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். அதன்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் டிவி - டி1 ராக்கெட் மூலம் இன்று (21.10.2023) காலை 8 மணிக்கு தரையில் இருந்து 16.6 கி.மீ. தூரம் வரை ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்கலம் விண்ணில் பாய தயாராக இருந்தது.
அப்போது நிலவிய மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 8.30 மணிக்கு கவுண்டவுன் மாற்றி அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 8.45 மணிக்கு என கவுண்டவுன் மாற்றி அமைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படுவதற்கு 5 நொடிகளுக்கு முன்பு இந்த சோதனை நிறுத்தப்பட்டு வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், ககன்யான் மாதிரி சோதனை எந்த தேதியில் நடத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் மாதிரி சோதனைக்கான டிவி - டி1 ராக்கெட் பாதுகாப்பாக இருக்கிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
![Kaganyan project trial success over hurdles](http://image.nakkheeran.in/cdn/farfuture/-yPwUq6aCwDqT3kQM9bdM35gG2T2jEi47zY6buhiLLk/1697865607/sites/default/files/inline-images/gaganyaan-balloon.jpg)
அதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இந்த சோதனை மீண்டும் இன்று காலை 10 மணியளவில் ககன்யான் திட்டத்துக்கான மாதிரி விண்கலத்தை சுமந்து செல்லும் டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டர் திறன் கொண்ட ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. மேலும் மாதிரி விண்கலம் விண்ணில் 17 கி.மீ. தொலைவுக்கு ஏவப்பட்டு பின்னர் பாராசூட் மூலமாக பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடலில் விழுந்த ககன்யான் பயணிகள் கலன் இந்திய கப்பல் படையால் மீட்கப்பட்டது. இதன் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.