Skip to main content

டெல்லியில் ஒருவருக்கு 'ஓமிக்ரான்' உறுதி!

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

 

 

First Covid Omicron case in Delhi after Tanzania returnee tests positive

 

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஓமிக்ரான்' எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், 'ஓமிக்ரான்' தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. 

 

குறிப்பாக, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து வரும் டிசம்பர் 15- ஆம் தேதி அன்று தொடங்கப்படவிருந்த நிலையில், அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். 

 

இந்த நிலையில், ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி வந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 'ஓமிக்ரான்' நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் 'ஓமிக்ரான்' கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

ஏற்கனவே, கர்நாடகாவில் 2 பேருக்கும், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் 'ஓமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவால் வழக்கு; அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (15.04.2024) விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (15.04.2024) முடிவடைவதையொட்டி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Kavita court custody order

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் திகார் சிறையில் உள்ள கவிதாவை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். பண மோசடி தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் கவிதா சிபிஐயால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு மூன்று நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டது. இந்நிலையில், கவிதா சிபிஐ காவல் முடிந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு இன்று (15.04.2024) அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து கவிதாவை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.