narayanasamy

Advertisment

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது :- ’’பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நிரவ் மோடி 11 ஆயிரத்து 400 கோடி அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வங்கிகளின் பல்வேறு கெடுபிடிகளை தாண்டி இந்த ஊழல் நடைபெற்றிருப்பது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கியிருக்கிறது. இது நாட்டின் மிகப்பெரிய ஊழல். மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்தால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன். கட்சி மேலிடம் கேட்டால் சித்தராமையாவினை எதிர்ப்பதாக கூறுவேன். மாநிலத்தின் உரிமையை கேட்பேன்" என தெரிவித்தார்.

"இரண்டு தினங்களுக்கு முன்பு அரசின் சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணிபுரியும் ஊழியர்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மாநில தலைவர் சாமிநாதன் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தி, தரம் தாழ்ந்து பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தரம் தாழ்த்தி பேசியதற்கு அவர் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சாமிநாதன் புதுச்சேரி பா.ஜ.கவின் மாநில தலைவராக இருக்க தகுதியற்றவர்" என்று கூறினார்.

- சுந்தரபாண்டியன்