இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் மற்றும் ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களை பெற 77 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய நிறுவனங்களிடம் ஒப்பந்தத்தை பெற இடைதரகருக்கு 77 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கார்கள் மட்டுமின்றி தொழிற்சாலை உபகரணங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை பெற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் லஞ்சம் வழங்கியது என சிபிஐ ஏற்கனவே இந்நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையும் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.