Skip to main content

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரிப்பு; ஒரே மாதத்தில் 3- வது முறையாக உயர்வு!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

domestic gas cylinder price hike peoples

 

ஒரே மாதத்தில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 828 ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்துகொள்ள எண்ணெய் நிறுவன கூட்டமைப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

 

அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை கேஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. 

 

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமல்லா எல்பிஜி சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான நடைமுறையை மீறி 4- ஆம் தேதியன்று நிர்ணயம் செய்யப்பட்டது. அன்று 25 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதனால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 710- ல் இருந்து 735 ரூபாயாகவும், சேலத்தில் 728- ல் இருந்து 753 ரூபாயாகவும் அதிகரித்தது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இதன் விலை 719 ஆகவும், கொல்கத்தாவில் 745.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 

 

அப்பாடா... இத்துடன் விலையேற்றம் முடிந்து போனது என்று நடுத்தர வர்க்கத்தினர் பெருமூச்சு விட்டிருந்த நிலையில், திடீரென்று பிப். 15- ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் சேலத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை 753- ல் இருந்து 803 ரூபாயாக உயர்ந்தது. சென்னையில் 735- ல் இருந்து 785 ரூபாயாக அதிகரித்தது. 

 

திடீர் திடீரென்ற கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக வியாழனன்று (பிப். 25) எல்பிஜி சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தால் சேலத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை 803- ல் இருந்து 828 ரூபாயாகவும், டெல்லி, மும்பையில் 794 ரூபாயாகவும், கொல்கத்தா நகரில் 820.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

 

அதேநேரம், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் விலையைக் கடந்த மாதத்தைக் காட்டிலும், பிப்.25- ஆம் தேதியன்று, 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் பிப். 1- ஆம் தேதி, வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை தடாலடியாக 191 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இரண்டு தவணைகளில் மொத்தம் 24 ரூபாய் விலை குறைத்துள்ளனர். 

 

மேலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் மூன்று தவணைகளில் மொத்தம் 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, அனைத்து தரப்பு மக்களையும் பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.