ஊரடங்கை மீறி தந்தை வெளியே சென்றதால், அவரது மகனே காவல்துறையிடம் புகாரளித்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ கடந்துள்ளது. 2,28,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்தக் கரோனா வைரஸ் 2900க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது.இதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார்.இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊரடங்கை மீறி தந்தை வெளியே சென்றதால், அவரது மகனே காவல்துறையிடம் புகாரளித்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியின் ராஜோக்ரியைச் சேர்ந்தவர் அபிஷேக்.இவரது தந்தை வீரேந்தர், ஊரடங்கை மதிக்காமல் வீட்டிலிருந்து தினமும் வெளியே சென்று வந்துள்ளார். வைரஸ் பரவுவதால் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் எனப் பலமுறை அபிஷேக் தனது தந்தையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.இருப்பினும் அவரது தந்தை தொடந்து வெளியில் சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அபிஷேக் போலீசாருக்கு போன் செய்து தனது தந்தை செய்வது குறித்துக் கூறியுள்ளார்.அபிஷேக்கின் வீடு உள்ள பகுதிக்கு வந்த போலீசார்,அவரது தந்தை சாலையில் நடந்து செல்வதைப் பார்த்துள்ளனர்.அவரை வீட்டிற்கு அழைத்துவந்து வெளியில் செல்வது தவறு என அறிவுரை அளித்துள்ளனர்.ஆனால் போலீசாரின் அறிவுரையைக் கேட்க வீரேந்தர் மறுத்துள்ளார்.இதனையடுத்து அபிஷேக் தந்த புகாரின் அடிப்படையில் வீரேந்தர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.