Skip to main content

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு கரோனா! மரத்தடியில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம்!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020
 Corona for Puducherry NR Congress MLA! Legislative meeting held under a tree!

 

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கல் கூட்டம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நேற்று சட்டப்பேரவை அரங்கில் நடந்தது. வழக்கமாக இந்த சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்யும் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தரப்பினர் நேற்றுதான் முழுமையாக பங்கேற்றனர். அதில் பங்கேற்ற எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதியானது தெரிய வந்தது. அவர் தற்போது ஜிப்மரில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் அரங்கு முதல்முறையாக மூடப்பட்டது. இரு நாட்களுக்கு அந்த அரங்கு மூடியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதையடுத்து சட்டபேரவை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் உள்ள மரத்தடியில் நடத்தப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து, அங்கு பந்தல் அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப்பட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டு சபாநாயகர் சிவக்கொழுந்து பேரவையை தொடங்கி வைத்தார். பேரவை தொடங்கிய உடன் சபாநாயகர் சிவக்கொழுந்து மரத்தடியில் சட்டப்பேரவை நடைபெறுவதால் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாணையை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் முன்மொழிய, தொடர்ந்து விவாதம் நடைபெற்று  பட்ஜெட்க்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

 Corona for Puducherry NR Congress MLA! Legislative meeting held under a tree!


முன்னதாக அரசு எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காததால் சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா வைரஸ் பரவி உள்ளது என்றுகூறி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். அதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்  புதுச்சேரியில் மதுபான விற்பனைக் கொள்கையில் அரசுக்கு வருமானம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீது பேச வாய்ப்பு அளிக்காததால் மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

 

அதனைத் தொடர்ந்து நிறைவுரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, "சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் 7 நாட்களுக்கு தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். வரும்  திங்கட்கிழமை சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள், பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை என நடத்தப்படும்" என தெரிவித்தார். புதுச்சேரியில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.