Skip to main content

9 நாளில் 1400 கோடி சுருட்டல்; “மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” - காங்கிரஸ்

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

Congress says Central government should issue white paper who swindled crores from gujarat people

 

குஜராத்தில் போலி கால்பந்தாட்ட பந்தய செயலி மூலம், சீனர் ஒருவர் ரூ.1400 கோடி மோசடி செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 

 

சீனாவைச் சேர்ந்த வூ உயன்பே என்பவர் இந்தியர்கள் சிலருடன் சேர்ந்து ஆன்லைன் கால்பந்தாட்ட செயலியை உருவாக்கினார். இந்த செயலியை பயன்படுத்தி குஜராத் உள்ளூர் மக்கள் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளனர். அதன் பின்னர் இந்த செயலியின் பயன்பாடு திடீரென்று செயல்படாமல் போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர் . இந்த செயலி மூலம், சீனாவை சேர்ந்த வூ உயன்பே வெறும் 9 நாளில் சுமார் ரூ.1400 கோடி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி சீனாவுக்கு சென்றுவிட்டார். இது குறித்து குஜராத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் இதுவரை 9 பேர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “ எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைக்க அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. ஆனால், இந்தியர்களை ஏமாற்றி மோசடி செய்த சீனா நாட்டை சேர்ந்த வூ உயன்பே மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் எல்லையில் உள்ள குஜராத்தில் பதற்றமான நகரங்களில்  சீனா நாட்டவர் தங்கி ஒன்பது நாட்களில்  1200 பேரிடம் சுமார் ரூ.1400 கோடி மோசடி செய்து நாட்டை விட்டு சீனாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.

 

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் இருந்த மாநிலத்தில் இத்தகைய மோசடி நடந்துள்ளது. அவர்கள் இது மாதிரியான மோசடியை தடுக்க முடியாது. பிரதமருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறார். இந்த மோசடி குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி மற்றும் இப்போது வூ உயன்பே என தொடர்ந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்து தப்பித்து வருகிறார்கள்.

 

ஆனால், அவர்கள் மீது மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம், பிரதமர் மோடி, அரசு பொது பணத்தின் பாதுகாவலர் அல்ல என்பது தெரிகிறது. மாறாக, அவர் மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல விரும்பும் நபர்களுக்கு உதவும்  பயண நிறுவனமாக செயல்படுகிறார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 

சீன நபரின் மோசடி குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் வரை குஜராத் காவல்துறைக்கு 1088 புகார்கள் வந்துள்ளன. மேலும், ஹெல்ப்லைன் மூலம் 3600க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், மோடி அரசு சீன செயலியை தடை செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில் இருந்து தப்பி செல்வதற்கு முன் விசாரணை அமைப்புகள் அவரை ஏன் கைது செய்யவில்லை. விசாரணை அமைப்புகள் அரசியல் எதிரிகளுக்கு மட்டும் விசாரணை செய்து வருகின்றன. இது தான் மோடி மற்றும் அமித்ஷாவின் செயல்திட்டமா?" என்று கேள்வி எழுப்பினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.