Skip to main content

குஜராத் கலவரத்துக்கு ஒப்புதல் வாக்குமூலமா? - அதிர்வலையை ஏற்படுத்திய அமித்ஷா பேச்சு

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 
 
- தெ.சு.கவுதமன்

 

A confession for Gujarat riots? Amit Shah's speech that caused a sensation!

 

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அங்கே மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து அங்கே முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், குஜராத்திலுள்ள கேடா மாவட்டத்தின் மஹுதாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய அமித்ஷா, "காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வகுப்புவாத மோதல்கள் நிறைய நடந்து வந்தன. அப்படியான மோதல்களுக்கு வகுப்புவாத சக்திகளுக்கு 2002-ல் சரியான பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் குஜராத் 22 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது" என்று பேசினார்.

 

அவரது பேச்சுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்ததோடு, "நீங்கள் 2002-ல் கற்றுக்கொடுத்த பாடம் என்ன தெரியுமா? பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பில்கிஸ் பானோவின் 3 வயதுக் குழந்தை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜாப்ரியை படுகொலை செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதே. நீங்கள் கற்றுக்கொடுத்த பாடத்தால்தான் டெல்லியிலும் மதக்கலவரம் நடந்ததா என்பதைத் தெரிவிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

 

A confession for Gujarat riots? Amit Shah's speech that caused a sensation!

 

குஜராத் கலவரத்தின் மூலமாக ஏற்பட்ட மதப் பிளவுதான் அங்கே பா.ஜ.க. வலுவாகக் காலூன்ற உதவியாக இருந்தது. எனினும், அமித்ஷா, மோடி மீது இதுதொடர்பாகக் குற்றச்சாட்டுகள் இருந்ததால் கலவரத்தை ஆதரித்து அவர்கள் பேசுவது கிடையாது. ஆனால் சமீபத்தில்தான் அந்த கலவர வழக்குகளில் மோடி, அமித்ஷா ஆகியோர் குற்றமற்றவர்களென்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதையடுத்து தற்போது கலவரத்தை ஆதரித்துப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. குஜராத் கலவரங்களின் கொடூரம் குறித்து மீள் பார்வை பார்த்தால்தான் அதன் வலியை நம்மால் உணர முடியும்.

 

2002-ம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அயோத்திக்குச் சென்றுவிட்டு அகமதாபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலில் கரசேவகர்கள் பயணம் செய்தனர். அந்த விரைவு வண்டி கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 70 பேர் அதில் சிக்கிப் பலியானார்கள். அதன் எதிரொலியாக, குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக நிகழ்ந்த வன்முறை வெறியாட்டத்தில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என 2000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள்.

 

சர்தார்புரா கிராமத்தில் ஒரே வீட்டிலிருந்த 33 முஸ்லிம்கள் எரித்து படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாமியர்கள் பெருமளவு குடியிருந்த குல்பர்கா குடியிருப்பினுள் கலவரக்காரர்கள் நுழைந்து பல வீடுகளைத் தீவைத்து எரித்ததில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்பட 69 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பெஸ்ட் பேக்கரிக்கு தீவைத்ததில் அங்கே பணியாற்றியவர்கள் உட்பட 14 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுபோன்ற துயரச் சம்பவங்களைப் பெரிய பட்டியலிடலாம்.

 

A confession for Gujarat riots? Amit Shah's speech that caused a sensation!

 

ராதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்மணி, அவரது மூன்றரை வயது மகள் சலேஹா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் மீது வன்முறையாளர்கள் கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் என்னவானார்களென்றே தெரியவில்லை. பில்கிஸ் பானோ, அவரது தாயார் மற்றும் மூன்று பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களைக் கொடூரமாகக் கொன்றனர். பில்கிஸ் பானோ மயக்கமடைந்ததால் அவரையும் அவரது குழந்தையையும் மட்டும் விட்டுவிட்டுச் சென்றனர். இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கால் பல்வேறு அச்சுறுத்தல்கள், இடைஞ்சல்கள் செய்யப்பட்டன. அனைத்தையும் மீறி தனது குற்றச்சாட்டுகளை நிரூபித்து 11 பேருக்கு தண்டனை கிடைக்கச் செய்தார். அந்த குற்றவாளிகளைத்தான் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதியளித்ததாகக் கூறி குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது. இவற்றைத்தான் அசாதுதீன் ஓவைசி அமித்ஷாவுக்கு பதிலடியாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒன்றிய அமைச்சராக இருப்பவர் மதரீதியாக பிரிவினை மனநிலையோடு பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருப்பதை காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.