Skip to main content

குஜராத் கலவரத்துக்கு ஒப்புதல் வாக்குமூலமா? - அதிர்வலையை ஏற்படுத்திய அமித்ஷா பேச்சு

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 
 
- தெ.சு.கவுதமன்

 

A confession for Gujarat riots? Amit Shah's speech that caused a sensation!

 

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அங்கே மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து அங்கே முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், குஜராத்திலுள்ள கேடா மாவட்டத்தின் மஹுதாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய அமித்ஷா, "காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வகுப்புவாத மோதல்கள் நிறைய நடந்து வந்தன. அப்படியான மோதல்களுக்கு வகுப்புவாத சக்திகளுக்கு 2002-ல் சரியான பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் குஜராத் 22 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது" என்று பேசினார்.

 

அவரது பேச்சுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்ததோடு, "நீங்கள் 2002-ல் கற்றுக்கொடுத்த பாடம் என்ன தெரியுமா? பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பில்கிஸ் பானோவின் 3 வயதுக் குழந்தை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜாப்ரியை படுகொலை செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதே. நீங்கள் கற்றுக்கொடுத்த பாடத்தால்தான் டெல்லியிலும் மதக்கலவரம் நடந்ததா என்பதைத் தெரிவிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

 

A confession for Gujarat riots? Amit Shah's speech that caused a sensation!

 

குஜராத் கலவரத்தின் மூலமாக ஏற்பட்ட மதப் பிளவுதான் அங்கே பா.ஜ.க. வலுவாகக் காலூன்ற உதவியாக இருந்தது. எனினும், அமித்ஷா, மோடி மீது இதுதொடர்பாகக் குற்றச்சாட்டுகள் இருந்ததால் கலவரத்தை ஆதரித்து அவர்கள் பேசுவது கிடையாது. ஆனால் சமீபத்தில்தான் அந்த கலவர வழக்குகளில் மோடி, அமித்ஷா ஆகியோர் குற்றமற்றவர்களென்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதையடுத்து தற்போது கலவரத்தை ஆதரித்துப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. குஜராத் கலவரங்களின் கொடூரம் குறித்து மீள் பார்வை பார்த்தால்தான் அதன் வலியை நம்மால் உணர முடியும்.

 

2002-ம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அயோத்திக்குச் சென்றுவிட்டு அகமதாபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலில் கரசேவகர்கள் பயணம் செய்தனர். அந்த விரைவு வண்டி கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 70 பேர் அதில் சிக்கிப் பலியானார்கள். அதன் எதிரொலியாக, குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக நிகழ்ந்த வன்முறை வெறியாட்டத்தில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என 2000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள்.

 

சர்தார்புரா கிராமத்தில் ஒரே வீட்டிலிருந்த 33 முஸ்லிம்கள் எரித்து படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாமியர்கள் பெருமளவு குடியிருந்த குல்பர்கா குடியிருப்பினுள் கலவரக்காரர்கள் நுழைந்து பல வீடுகளைத் தீவைத்து எரித்ததில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்பட 69 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பெஸ்ட் பேக்கரிக்கு தீவைத்ததில் அங்கே பணியாற்றியவர்கள் உட்பட 14 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுபோன்ற துயரச் சம்பவங்களைப் பெரிய பட்டியலிடலாம்.

 

A confession for Gujarat riots? Amit Shah's speech that caused a sensation!

 

ராதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்மணி, அவரது மூன்றரை வயது மகள் சலேஹா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் மீது வன்முறையாளர்கள் கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் என்னவானார்களென்றே தெரியவில்லை. பில்கிஸ் பானோ, அவரது தாயார் மற்றும் மூன்று பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களைக் கொடூரமாகக் கொன்றனர். பில்கிஸ் பானோ மயக்கமடைந்ததால் அவரையும் அவரது குழந்தையையும் மட்டும் விட்டுவிட்டுச் சென்றனர். இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கால் பல்வேறு அச்சுறுத்தல்கள், இடைஞ்சல்கள் செய்யப்பட்டன. அனைத்தையும் மீறி தனது குற்றச்சாட்டுகளை நிரூபித்து 11 பேருக்கு தண்டனை கிடைக்கச் செய்தார். அந்த குற்றவாளிகளைத்தான் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதியளித்ததாகக் கூறி குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது. இவற்றைத்தான் அசாதுதீன் ஓவைசி அமித்ஷாவுக்கு பதிலடியாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒன்றிய அமைச்சராக இருப்பவர் மதரீதியாக பிரிவினை மனநிலையோடு பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருப்பதை காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.