Skip to main content

"தடுப்பூசிக்காக மாநிலங்கள் இனி செலவழிக்கத் தேவையில்லை" - பிரதமர் மோடி அறிவிப்பு!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

narendra modi

 

கரோனா தொற்று இந்தியாவில் குறைந்துவரும் நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் மாநிலங்கள் இனி தனியே தடுப்பூசி கொள்முதல் செய்யத் தேவையில்லை என்றும், ஏழை மக்களுக்கு தீபாவளி வரை ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு: உலகத்தின் பெரும்பாலான நாடுகள், கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத பெருந்தொற்று உலக மக்களைப் பாதித்து வருகிறது. கரோனாவால் நம்மில் பலர் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறோம். இதுவரை இல்லாத அளவிற்கு மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்திருக்கிறோம். இந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் பல பாடங்களை நாம் கற்று வருகிறோம். மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் நிரம்பி வழிவதை நாம் கண்டுள்ளோம். கரோனா தொற்றால், மருத்துவத்துறையில்  அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிக்கும் கொண்டு சென்றுள்ளோம். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை விரைவாகக் கொண்டுசெல்லும் வசதி பெற்றிருக்கிறோம். கரோனா அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம்.

 

இதற்கு முன் இல்லாத வகையில் தடுப்பூசியை விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். வரலாற்றில் இல்லாத அளவு தடுப்பூசி உற்பத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளோம். தடுப்பூசி பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். கரோனாவை வீழ்த்த நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையைத் தொடங்கியுள்ளோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க, கடைசி வரை நாம் தடுப்பூசியைக் கொண்டு செல்ல வேண்டியது நமது கடைமை. எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பு நிரந்தரமாக இருக்கும். ஒரே ஆண்டில் இந்தியா இரண்டு தடுப்பூசிகளை அறிமுகம் செய்துள்ளது. தடுப்பூசி மட்டும் சரியான நேரத்தில் கிடைக்காமல் இருந்திருந்தால், பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

 

இதுவரை 23 கோடி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா குறித்த உலகநாடுகளின் சந்தேகத்திற்கு தடுப்பூசி மூலம் தீர்வு கண்டிருக்கிறோம். தடுப்பூசிக்கான ஏற்பாடுகளைக் கடந்தாண்டு ஏப்ரலிலேயே மத்திய அரசு செய்யத் தொடங்கிவிட்டது. வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும். மேலும் வெளிநாடுகளிலிருந்து மூன்று தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். மூக்கில் விடும் வகையிலான கரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும். மிகக்குறுகிய காலத்தில் தடுப்பூசிகளைத் தயாரித்து மக்களுக்குச் செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை. கரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் தீரும். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன்கள பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றினர்.

 

ஏழு நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன. அவற்றில் மூன்று தடுப்பூசிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மாநிலங்கள் நாங்கள் ஏன் தடுப்பூசியைத் தயாரிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்புகின்றன. மத்திய அரசு, தடுப்பூசி விஷயத்தில் மாநிலங்களுக்கு வகுத்துள்ள விதிகளின்படியே செயல்படுகின்றன. பொது முடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து முடிவெடுப்பதை மாநிலங்களிடமே விட்டுள்ளோம். தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே அதிக அளவு தயாரிக்க, மத்திய அரசு முயன்று வருகிறது. மாநில அரசுகளின் கோரிக்கைக்கேற்ப தடுப்பூசி கொள்கைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்கிறோம். மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கைகளில் மாநிலங்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிவரை மத்திய அரசு மட்டுமே தடுப்பூசி விநியோகத்தை மேற்கொண்டு வந்தது. தடுப்பூசி விநியோகத்தில் இனி மத்திய அரசே முடிவெடுக்கும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இலவசமாகத் தடுப்பூசிகள் வழங்கப்படும். கரோனா தடுப்பூசிக்காக மாநிலங்கள் இனி செலவழிக்கத் தேவையில்லை. 

 

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதத்தைத் தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்குச் செலுத்தலாம். அவற்றை மக்கள் கட்டணம் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம். இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு வழங்கும். ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்குத் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும். மாநில அரசுகள் இனி தனியாகத் தடுப்பூசியைக் கொள்முதல் செய்யத் தேவையில்லை. தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் விநியோகிக்கப்படும். நவம்பர் மாதம் 80 வரை கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.