Skip to main content

பெகாசஸ் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

supreme court

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சூழலில் பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழுவை அமைக்க தயார் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால், இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியதா இல்லையா என்பதைப் பொதுவெளியிலோ அல்லது பிரமாண பத்திரத்திலோ கூற முடியாது எனவும், உச்ச நீதிமன்றம் குழு அமைத்தால், அந்தக் குழுவின் முன் பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க தயார் எனவும் தெரிவித்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் மத்திய அரசு கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதா என கேள்வியெழுப்பியது.

 

இந்தநிலையில், கடந்த 7ஆம் தேதி பெகாசஸ் விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, பெகாசஸ் வழக்கில் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்துவருவதாகவும், சில அதிகாரிகளை சந்திக்க முடியாததால் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்த மத்திய அரசு வழக்கறிஞர், இதுதொடர்பாக முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்தநிலையில் இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு வழக்கறிஞர், சட்டவிரோதமாக எந்த ஒட்டுக்கேட்பும் நடைபெறவில்லை என தெரிவித்ததோடு, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் மத்திய அரசு பெகாசஸைப் பயன்படுத்தியதா என்பது குறித்து பிரமாண பத்திரத்தில் கூற முடியாது எனவும், இந்த விவகாரம் குறித்து அரசுடன் தொடர்பற்ற வல்லுநர்களின் குழுவை அமைக்க அனுமதித்தால் அந்தக் குழுவின் முன்னர் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா என தெரிவிக்க தயார் எனவும் கூறினார்.

 

இதனைதொடர்ந்து, பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்தவர்களின் வாதங்களைக் கேட்ட  நீதிபதிகள், பெகாசஸ் விவகாரத்தில் இரண்டு - மூன்று நாட்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்