Skip to main content

கொடூரமாக எலியைக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு; எலிக்கு பிரேதப் பரிசோதனை

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Case registered against man who brutally rat; Post-mortem examination of the rat

 

எலியின் வாலில் கல்லைக் கட்டி கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கடித்துக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

உத்திரப்பிரதேசத்தில் விலங்கு நல ஆர்வலர் விகேந்திர சர்மா என்பவர் மனோஜ் குமார் என்ற இளைஞரின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரில் மனோஜ் குமார் என்பவர் எலியின் வாலில் கல்லைக்கட்டி அதைக் கழிவுநீர் வாய்க்காலில் தூக்கி எறிந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது. 

 

மேலும், இது குறித்து விகேந்திர சர்மா கூறுகையில், மனோஜ் குமார் எலியின் வாலில் கல்லைக் கட்டி கழிவுநீர் வாய்க்காலில் மூழ்க வைத்து எடுத்துக்கொண்டு இருந்தார். நான் இதனைக் கண்டு எலியைக் கொடுக்குமாறு கேட்ட பொழுது, அதை அந்த கழிவுநீர் வாய்க்காலில் தூக்கியெறிந்தார். நான் உடனே கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி எலியை வெளியே எடுத்தேன். அப்பொழுது அது உயிருடன் தான் இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் இறந்து விட்டது. 

 

இது மட்டுமின்றி, இதுநாள் வரை அப்படித்தான் செய்து கொண்டு இருந்தேன் என்றும், இனிமேலும் அவ்வாறு தான் செய்யப்போகிறேன் என மனோஜ் குமார் கூறினார் என்று, விகேந்திர சர்மா கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த எலியுடன் காவல்நிலையத்திற்குச் சென்று விகேந்திர சர்மா புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் அலோக் மிஸ்ரா கூறுகையில், “குற்றவாளி கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். எலிகள் விலங்குகள் பிரிவின் கீழ் வராததால் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் இதற்குப் பொருந்தாது” எனக் கூறினார்.

 

எனினும், விகேந்திர சர்மா கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்நிலைய வழக்குப் பதிவின் அடிப்படையில் எலியின் பிரேதப் பரிசோதனை இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது. இது குறித்தான அறிக்கை 4 முதல் 5 நாட்களில் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆய்வில் விசித்திரம் காட்டிய மாவட்ட ஆட்சியர் !

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The collector Research pretending to be a patient in uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலம், பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள், வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்த தொடர் புகாரின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ், அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆட்சியர் கிருதி ராஜ் தலையில் முக்காடு அணிந்து ஒரு நோயாளி போல் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த மருத்துவர், ஆட்சியர் கிருதி ராஜிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்சியர் கிருதி ராஜ், தான் யார் என்பதை தெரிவித்த பிறகு, அந்த மருத்துவமனையே ஆட்டம் கண்டுள்ளது. 

அதன் பின்னர், ஆட்சியர் கிருதி ராஜ் அந்த மருத்துவமனை முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வில், மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது என பல குற்றங்கள் கண்டறியப்பட்டது. 

இது குறித்து ஆட்சியர் கிருதி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு  நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்குப் பிறகும் மருத்துவர் வரவில்லை என சுகாதார நிலையம் தொடர்பாக எனக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், நான் மறைந்திருந்து, முக்காடு போட்டுக் கொண்டு அங்கு சென்றேன். அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது.

வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இருந்தாலும், சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை எனவும் தெரிந்தது. கையிருப்பில் உள்ள பெரும்பாலான மருந்துகள் காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் தூய்மையும் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று கூறினார். 

Next Story

மது அருந்துவதை தடுத்த மனைவி; ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 Incident happened at husband in anger for A wife who abstains from drinking alcohol

உத்தரப்பிரதேசம் மாநிலம், நைத்துவா கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ் சக்சேனா. இவருக்கு ஷானோ என்ற பெண்ணுடன் திருமணமாகி, 8 மற்றும் 5 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். முனீஸ் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்.

அதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (07-03-24) இரவு முனீஸ் வழக்கம் போல், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மது போதையில் வீடு திரும்பிய முனீஸுக்கும் அவரது மனைவி ஷானோவுக்கும் தகராறு ஏற்பட்டது.  இதனையடுத்து, முனீஸ் தனது வீட்டிலேயே மது குடித்துள்ளார். அப்போது,  அவர் வீட்டில் குடிப்பதை ஷானோ தடுக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முனீஸ், தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மனைவி ஷானோ மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷானோவின் மாமியார் முன்னி தேவி, ஷானோவை காப்பாற்ற முயன்றபோது அவருக்குத் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அங்கு வந்து ஷானோ மீது ஏற்பட்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும், ஷானோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷானோவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷானோவை காப்பாற்ற முயன்றதில் தீக்காயம் அடைந்த மாமியாரை மீட்டு மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, தலைமறைவாகியுள்ள முனீஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மது அருந்துவதைத் தடுக்க முயன்ற மனைவி மீது கணவன் தீ வைத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.