
சியாச்சின் பனிமலையில் முதல் முறையாக கேப்டன் சிவா சவுகான் என்ற பெண் ராணுவ அதிகாரி பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இமய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது சியாச்சின் பனிச்சிகரம். சுமார் 20 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்தப் பனிப்பகுதி, உலகின் மிக உயரமான போர்க்களம் ஆகும். அங்கு 1984 ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. குறிப்பாக இங்கு இந்திய ராணுவ வீரர்கள் கடும் குளிருடன் போராட வேண்டிய சூழலும் உள்ளது.
இந்நிலையில், சியாச்சினில் முதல் முறையாக கேப்டன் சிவா சவுகான் என்ற பெண் ராணுவ அதிகாரி பணியமர்த்தப்பட்டுள்ளார். சியாச்சினில் உள்ள குமார் போஸ்டில், ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ் எனும் இந்திய ராணுவப் பிரிவைச் சேர்ந்த கேப்டன் சிவா சவுகான் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சியாச்சின் சிகரத்தில் பணிபுரியும் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.