Skip to main content

62 மரங்களை வெட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனம்: சிறை தண்டனை இல்லை... ஆனால் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

CALCUTTA HIGH COURT

 

கொல்கத்தாவின் முக்கிய பகுதியான ரசல் தெருவில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, செவன் ஸ்டார் ஹோட்டல் கட்டுவதற்காக 62 மரங்களை சட்டவிரோதமாக வெட்டி சாய்த்தது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மரங்களை வெட்டிய அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

 

அந்த மனுவில், தாங்கள் முதல்முறையாக இந்த தவறை செய்துள்ளதாக குறிப்பிட்டதோடு, 62 மரங்களை வெட்டியதற்கு இழப்பீடாக அதைவிட இரட்டிப்பான மரங்களை நடுவதாகவும், எனவே தங்களுக்கு எதிரான விசாரணையைக் கைவிட வேண்டுமென்றும் அந்நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர் மந்தா, மரங்களை வெட்டியது தொடர்பான வழக்கைக் கைவிட ரியல் எஸ்டேட் நிறுவனம் 15 நாட்களுக்குள் 40 கோடி அபராதம் செலுத்த வேண்டுமெனவும் 100 மரங்களை நட வேண்டுமென்றும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

 

"மனுதாரர்களுக்கு (மரத்தை வெட்டியவர்களை) சிறை தண்டனை விதிப்பது, வெட்டப்பட்ட மரங்களைத் திரும்ப கொண்டுவராது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, மாநிலம் அல்லது வனத்துறை அல்லது சமூகத்திற்கு இழப்பீடு வழங்குவதே நியாயமான தண்டனையாக இருக்கும். இந்த இழப்பீட்டை பொதுவாக சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும், சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவதற்கு எதிரான கண்காணிப்பை சிறப்பாக பராமரிப்பதற்கும் பயன்படுத்தலாம்" என நீதிபதி ராஜசேகர் மந்தா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும், 15 நாட்களுக்குள் 40 கோடியை செலுத்துவதோடு 100 மரங்களை நடாவிட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக மரம் வெட்டினால், அம்மாநில சட்டப்படி நீதிமன்றம் 5,000 அபராதமோ, ஓராண்டு சிறை தண்டனையோ, அல்லது இரண்டுமோ விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெட்டப்பட்ட அளவிற்கான மரங்களை அதை வெட்டியவர் திரும்ப நட வேண்டும். அதுவரை தினமும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிபிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Case against Nayinar Nagendran High Court action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத,  தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.