Skip to main content

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு அதிகரிப்பு - பஞ்சாப், மேற்கு வங்கம் எதிர்ப்பு!

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

indian border

 

பஞ்சாப், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படைக்கான அதிகார வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதற்கு பஞ்சாப் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், சர்வதேச எல்லையிலிருந்து அம்மாநிலங்களுக்குள் 15 கிலோமீட்டர் வரை சோதனை நடத்தவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் எல்லை பாதுகாப்பு படைக்கு (பி.எஸ்.எஃப்) அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில் சர்வதேச எல்லையிலிருந்து மாநிலங்களுக்குள் 15 கிலோமீட்டர் வரை என்ற எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை மத்திய உள்துறை அமைச்சகம் 50 கிலோமீட்டராக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், சர்வதேச எல்லையிலிருந்து அம்மாநிலங்களுக்குள் 50 கிலோமீட்டர் பகுதி வரை எல்லை பாதுகாப்பு படையால் கைது செய்தல் மற்றும் சோதனையிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ‘எல்லைப் பாதுகாப்பு படையின் செயல்திறனை மேம்படுத்தவும்’ மற்றும் ‘கடத்தல் மோசடிகளை ஒடுக்கவும்’ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

udanpirape

 

ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "சர்வதேச எல்லைகளில் 50 கி.மீ. வரம்புக்குள் எல்லைப் பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதல் ஆகும். விவேகமற்ற இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் மேற்கு வங்க அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், "சட்டம் ஒழுங்கு என்பது மாநிலத்திற்கு உரித்தானது. ஆனால், இதில் மத்திய அரசு மத்திய நிறுவனங்கள் மூலம் தலையிட முயற்சிக்கிறது" என கூறியுள்ளார். பாஜக ஆளும் அசாம் மாநில முதல்வர் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். இதனிடையே எல்லை பாதுகாப்பு படை, “அதிகார வரம்பு நீட்டிப்பு, எல்லை தாண்டிய குற்றங்களைத் திறம்படக் கட்டுப்படுத்த உதவும்" என விளக்கமளித்துள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தப் புதிய உத்தரவின்படி, குஜராத்தில் 80 கிலோமீட்டராக இருந்த எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு, 50 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் மொத்த பகுதியும் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பிற்குள் வரும் நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த பகீர் சம்பவம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Incident happened on his pregnant wife in punjab

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர், பிங்கி (23) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். 6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில், இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்திருந்தது.

இதற்கிடையில், சில தினங்களாகவே, சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல், சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவி பிங்கியை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து தீ வைத்துள்ளார். இதில், கர்ப்பிணி பெண்ணான பிங்கியின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சுக்தேவ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிங்கியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கர்ப்பிணி மனைவியை தீ வைத்து தப்பியோடிய சுக்தேவை பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.