Skip to main content

எல்லையில் பிடிபட்ட நபர் உளவாளியா? - சீன நபரிடம் தீவிர விசாரணை!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

suspected chinese spy

 

வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தின் மால்டா பகுதிக்குள் நேற்று (10.06.2021) சீனாவைச் சேர்ந்த நபர் ஊடுருவ முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் அளித்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து அந்த அமைப்புகளும் அவரிடம் விசாரணை நடத்தின. இதில் எல்லையில் ஊடுருவ முயன்ற 35 வயதான அந்த நபர், தனது பெயர் ஹான் ஜுன்வே எனவும், சீனாவின் ஹூபேயில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டில் அவர் ஜூன் 2ஆம் தேதி வங்கதேசத்திற்கு வந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. எல்லையில் ஊடுருவ முயன்ற அந்த நபர், ஜூன் 2ஆம் தேதி வங்கதேசத்திற்கு வந்து சீன நண்பர் ஒருவருடன் தங்கியிருந்துள்ளார். 

 

ஜூன் 8ஆம் தேதி, வங்கதேசத்தின் சோனா மஸ்ஜித் மாவட்டம், சபைநவப்கஞ்ச் பகுதிக்கு வந்து அங்கே தங்கியிருந்துள்ளார். பிறகு ஜூன் 10ஆம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது பிடிபட்டுள்ளார். விசாரணையின்போது அவர், தான் இதற்கு முன்பாக நான்குமுறை இந்தியா வந்துள்ளதாக கூறியுள்ளார். 2010இல் ஹைதராபாத்திற்கும்,  2019க்குப் பிறகு மூன்றுமுறை குருகிராம், டெல்லிக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனது தொழில்கூட்டாளி, லக்னோவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஊடுருவ முயன்ற நபர் மீது ஏற்கனவே இந்தியாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இந்திய விசா கிடைக்கவில்லை. அதேநேரத்தில் வங்கதேசம், நேபாளதிற்கு விசா கிடைத்துள்ளது. அதன்மூலம் வங்கதேசம் வந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், எல்லை பாதுகாப்புப் படையினர், அவரிடம் மின்னணு கருவி ஒன்றைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் சீன உளவாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அக்பர் - சீதா’ சர்ச்சை; சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட புதிய பெயர்கள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
New names given to lions on 'Akbar - Sita' Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவைத் தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அந்தச் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள். எனவே இது போன்ற பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், அக்பர் - சீதா பெயரால் சர்ச்சையில் சிங்களுக்கு புதிய பெயரை வைக்க மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதில், அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’ என்ற பெயரும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு ‘தயா’ என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு பரிந்துரைத்துள்ளது.

Next Story

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்; பா.ஜ.க கடும் குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJP strongly accused on mamata banerjee on Riots at Ram Navami Procession

நாடு முழுவதும் நேற்று (17-04-24) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி சார்பாக நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது, அந்த ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கல்வீச்சு தாக்குதல் நடந்த அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்த கும்பல்களை கலைக்க தடியடி நடத்தியும், புகை குண்டுகளை வீசியும் நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம் நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று அங்குள்ள பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ கடந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் தல்கோலா, ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது போல், ​​இந்த ஆண்டும் மம்தா காவல்துறை ராம பக்தர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற அமைதியான ராம நவமி ஊர்வலம், சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மம்தாவின் காவல்துறை  குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஊர்வலம் திடீரென முடிவடைவதை உறுதி செய்வதற்காக ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இது மட்டுமின்றி, மாணிக்யஹார் மோரில் உள்ள சனாதானி சமூகத்தைச் சேர்ந்த கடைகளை  கொள்ளையடிப்பதையும் மம்தாவின் காவல்துறை தடுக்க முடியவில்லை. 

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன். எனவே, மேற்கு வங்கத்தில் மத விழாக்களை அமைதியான மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் கொண்டாட, மாநில அரசு மாற்றப்பட வேண்டும். மேலும், ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.