Skip to main content

அறிவித்த அடுத்த நாளே விலகிய பாஜக வேட்பாளர்

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
BJP candidate withdrew from the contest

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக 170 முதல் 190 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார்.

நட்சத்திர வேட்பாளராக, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.மேற்குவங்கம் அசான்சோல்  தொகுதியில் பாஜக சார்பில் போஜ்புரி நடிகர்  பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் மேற்குவங்கம் அசான்சோல்  தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் பவன் சிங் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அவர் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் அவர் மீது கண்டனங்கள் எழுந்திருந்தது.  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகரிகா கோஷ் உள்ளிட்டோர் பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சனங்களை வைத்திருந்தனர். இந்நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் போட்டியில் இருந்து விலகுவதாக போஜ்புரி நடிகர் பவன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

சார்ந்த செய்திகள்