Skip to main content

வங்கிக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு; ரெப்போ விகிதம் உயர்வதால் உங்கள் வங்கிக்கடன் வட்டி உயரும் அபாயம்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

- தெ.சு. கவுதமன்

 

Attention bank loan holders; A rise in the repo rate means a higher interest rate risk with your bank

 

ரெப்போ விகிதத்தை 5வது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வங்கிக்கடன் வட்டி மேலும் உயர்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

இன்று (டிச.7 2022) நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ விகிதம்) 0.35% ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த 2022-23ஆம் ஆண்டில் மட்டுமே வெறும் எட்டே மாதங்களில் இதுவரை 5 முறை ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மே மாதம் நான்காம் தேதி முதன்முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஒவ்வொரு ஆண்டிலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரெப்போ விகிதத்தை அப்போதைய நிதி நிலவரத்துக்கேற்ப ரிசர்வ் வங்கி மாற்றியமைக்கும். சில முறை ரெப்போ விகிதத்தை உயர்த்துவதும், சில முறை குறைப்பதும் நடக்கும். ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களாகிய பொதுமக்களுக்கு வழங்கும் வங்கிக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றத்தைச் செய்யும். ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும்போது, வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும். எனவே இது பொதுமக்களுக்குப் பாதகமாக அமையும்.

 

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரலில் தொடங்கி இப்போதுவரை ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் 5.9% ஆக இருந்த ரெப்போ விகிதம் தற்போது, 6.25% ஆக உயர்ந்துள்ளது. இது எந்த ஆண்டுமில்லாத கடுமையான உயர்வாகும். இதன் காரணமாக வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தில், கடந்த ஏப்ரலிலிருந்து இப்போதுவரை 23% உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கிக் கடனுக்கான வட்டி உயர்த்தப்படுவதால், வங்கிக் கடனுக்கான கால அளவு மேலும் சில மாதங்கள் அதிகரிக்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகை மேலும் அதிகரிக்கும்.

 

உதாரணமாக, ஒருவர் 20 ஆண்டு காலத்துக்கு 30 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் வாங்கியிருந்து, அவரது வட்டி விகிதம் 7% என்று ஏப்ரலில் இருந்திருந்தால் அது 9.25 சதவீதமாக உயர்வு கண்டுவிடும். அதேபோல் அவர் கட்டவேண்டிய மாதாந்திர இ.எம்.ஐ. தொகையும் சுமார் 4,000 ரூபாய் வரை அதிகரித்துவிடும். இது 17.75% உயர்வாகும். இப்படி உயர்த்தப்படுவது பொதுத்துறை வங்கியில் வங்கிக்கடன் பெற்றவர்களைவிட இதர நிதி நிறுவனங்களிலும் தனியார் வங்கிகளிலும் பெற்றவர்களுக்கு மேலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இருந்த போதும் பொருளாதார மந்த நிலையைச் சமாளிக்க ரெப்போ விகிதத்தை உயர்த்துவதைத் தவிர்க்க முடியாது என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார். 

Next Story

“97 % ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன” - ரிசர்வ் வங்கி தகவல்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
97 % Rs 2000 notes withdrawn RBI Information

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே ரிசர்வ் அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகும் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த மதிப்பு மொத்தமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 97.38 சதவீதம் ஆகும். அதாவது 97.38 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் 9 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் மீதமுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.