உத்தரப்பிரதேச மாநிலத்தில் நமாமி கங்கா திட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் அங்கு சென்றிருந்த பிரதமர் மோடி படியேறும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
![atal ghat stairs to be reconstructed said uttarpradesh officer](http://image.nakkheeran.in/cdn/farfuture/3HYmxylf4CPpGFs7u6Aj-btjQvlqO4V2uxNqosQfRmA/1576669920/sites/default/files/inline-images/bbfrfr.jpg)
கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அதன் பின்னர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கங்கை நதியில் படகில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும் போது, படியில் பிரதமர் மோடி ஏறும் போது கால் தடுக்கி கீழே விழுந்தார். அப்போது அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் மோடியை தாங்கி பிடித்தனர். படிகளில் ஒன்று மட்டும் சற்று உயரமாக இருந்ததால் பிரதமர் மோடி தடுக்கி விழுந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த படிக்கட்டு விரைவில் இடித்து மீண்டும் சரியான உயரத்தில் கட்டப்படும் என கோட்ட ஆணையர் சுதிர் எம்.போப்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஒரே ஒரு படி மட்டுமே சரியான உயரத்தில் இல்லாமல் இருக்கிறது. விரைவில் அந்த படிக்கட்டு இடிக்கப்பட்டு, மற்ற படிகளின் உயரத்துக்கு இணையாக கட்டப்படும். இன்னும் நிறைய பேர் அந்த படியில் தடுக்கி விழுந்துள்ளனர். எனவே கூடிய விரைவில் அந்த படி சீரமைக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.