Skip to main content

“வெளிநாடு செல்லும் ராகுல் ஒருபுறம், லீவு எடுக்காத மோடி மறுபுறம்” - அமித்ஷா பேச்சு

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
 Amit Shah speech on Rahul going abroad on one side, Modi not taking leave on the other

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆறாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (25-05-24) 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், சந்த் கபீர் நகர் பகுதியில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியா கூட்டணி, கர்நாடகாவில், பிற்படுத்தப்பட்டோருக்கு 5% இடஒதுக்கீடு அளித்துள்ளது. ஹைதராபாத்தில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில், முஸ்லீம்களுக்கு தவறாக வழங்கப்பட்ட ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கொரோனா வைரஸிலிருந்து நாட்டை யாரால் பாதுகாக்க முடியும்? சந்திரனுக்கு சந்திராயன் அனுப்ப யாரால் முடியும்?. கோடிக்கணக்கான ஏழைகளுக்கு யார் எரிவாயு இணைப்பு கொடுக்க முடியும்? 80 கோடி மக்களுக்கு யார் ரேஷன் கொடுக்க முடியும்? 30 கோடிக்கும் அதிகமான மக்களின் 5 லட்சம் வரையிலான சுகாதாரச் செலவை யாரால் தாங்க முடியும்? 14 கோடி வீடுகளுக்கு குழாய் நீரை யார் விட முடியும்? 12 கோடி வீடுகளில் யாரால் கழிப்பறை கட்ட முடியும்? மோடியால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றால், யாரை பிரதமராக்க வேண்டும்?” எனப் பேசினார்.

மேலும் அவர், “இன்று நான் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் பெரும்பான்மை பெற்றால் உங்கள் பிரதமர் யார்?. சரத் பவார், லாலு யாதவ் அல்லது உத்தவ் தாக்கரே பிரதமராக முடியுமா?. ராகுல் காந்தி பிரதமராக முடியுமா?. முதல் ஐந்து கட்டத் தேர்தலில் இந்தியா கூட்டணி அழிக்கப்பட்டது. நான் சொல்கிறேன், இந்த முறை காங்கிரசுக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது, அகிலேஷ் யாதவுக்கு 4 இடங்கள் கூட கிடைக்காது. லாலு பிரசாத் யாதவ் தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார், உத்தவ் தாக்கரே தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார், சரத் பவார் தனது மகளை முதல்வராக்க விரும்புகிறார், ஸ்டாலின் தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார், சோனியா காந்தியும் தன் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புகிறார். 

ஒருபுறம் இத்தாலி, தாய்லாந்து, பாங்காக் என்று புறப்படும் ராகுல் காந்தி. மறுபுறம், 23 ஆண்டுகளாக லீவு எடுக்காமல், எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கூட கொண்டாடும் நரேந்திர மோடி. ராமர் கோயில் கட்டியவருக்கும், ராமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் இடையேயான தேர்தல் இது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“எதிர்க்கட்சிகளை மோடி அரசு அவமதித்துவிட்டது” - ராகுல் காந்தி காட்டம்!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
The Modi govt has insulted the opposition parties Rahul Gandhi

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இத்தகைய சூழலில் தான் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (25.06.2024) நடைபெறுகிறது. இதனையொட்டி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசினார். அப்போது, சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி ஒருமனதாக நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் பாரம்பரியம் தொடர வேண்டும் வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங். இதற்கிடையே மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்பிகளில் ஒருவரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான ஓம் பிர்லா தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

The Modi govt has insulted the oppThe Modi govt has insulted the opposition parties Rahul Gandhiosition parties Rahul Gandhi

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “சபாநாயகராகப் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று ராஜ்நாத் சிங்கிடம் கூறியுள்ளோம். ஆனால் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. ராஜ்நாத் சிங், மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். எனவே சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்போம். மேலும் துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறினோம். ஆனால் இதுவரையில் எந்த பதிலும் வரவில்லை. எதிர்க்கட்சிகளை மோடி அரசு அவமதித்துவிட்டது” எனத் தெரிவித்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.