Skip to main content

“மகளிர் இட ஒதுக்கீடு 2029ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்” - அமித்ஷா

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

 Amit Shah says Women's reservation to come into effect after 2029

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று (21-09-23) தொடங்கி நடைபெற்றது.

 

இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி எம்.பி.களான கனிமொழி, தமிழச்சி பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்டோர் மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகளிருக்கான இட ஒதுக்கீடு 2029ஆம் ஆண்டுக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

 

இது குறித்து பேசிய அமித்ஷா, “பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருப்பது இது ஐந்தாவது முறையாகும். முதல் முறையாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு சார்பில் கடந்த 1996ஆம் ஆண்டில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த மசோதா காலாவதியானது. இரண்டாவது முறையாக வாஜ்பாய் தலைமையிலான அரசு கொண்டு வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. அதுவும் நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடைந்ததால் காலாவதியானது. இந்த நான்கு முறையும் பெண்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால், இந்த முறை மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதாவில் குறைகள் ஏதேனும் இருந்தால், அதை பின்னர் நிவர்த்தி செய்துகொள்ளலாம். 

 

மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் என்ற அச்சம் தேவை இல்லாதது. ஏனென்றால், 2024ஆம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் வரும் அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பையும், தொகுதி மறுவரையறைகளையும் உடனடியாக மேற்கொள்ளும். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறையை தொடங்கி வைக்கும். அந்த வகையில், மக்களவை மற்றும் மாநில சட்டசபையிலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு 2029ஆம் ஆண்டுக்கு பிறகு நடைமுறைக்கு வரும்” என்று கூறினார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

The central government has called for an all-party meeting 

 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 15 நாட்கள் நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 4 ஆம் தேதி (04.12.2023) தொடங்க உள்ள நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி (02.12.2023) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனர். இதனையொட்டி அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

 

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதால், இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“ம.பி.யில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி” - அமித்ஷா வாக்குறுதி

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Amit Shah says If BJP comes to power in MP, allow free darshan in Ayodhya

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு  கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

 

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், சிரோஞ்ஜ் தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் தங்களது மகன்களை முதலமைச்சராக்க திட்டமிட்டு வருகின்றனர். அதே போல், சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க நினைத்து வருகிறார். மத்திய பிரதேச வாக்காளர்களுக்கு இந்த ஆண்டு மூன்று முறை தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டீர்கள். இரண்டாவது தீபாவளி மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் நாளான டிசம்பர் 3 ஆம் தேதி பா.ஜ.க வெற்றி பெற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவீர்கள்.

 

மூன்றாவது தீபாவளி, அயோத்தி ராமர் தனது ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நாளான ஜனவரி 22ஆம் தேதி ஆகும். எனவே, இம்முறை 3 தீபாவளி காத்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு மத்திய பிரதேச மாநில மக்கள் இலவச தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்