Skip to main content

ஏர் இந்தியாவை வாங்கிய டாடா குழுமம்... முழுமையான தகவல்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

After 68 years, Air India is now in the hands of Tata again

 

68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்தின் வசமாகியுள்ளது. இதுகுறித்து டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் ரத்தன் டாடா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஏர் இந்தியாவே மீண்டும் வருக...வரவேற்கிறேன். பழைய நிலையை மீண்டும் கொண்டுவருவோம். ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கிய மத்திய அரசின் கொள்கை முடிவை வரவேற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இந்திய அரசின் விமான நிறுவனமாக செயல்பட்டுவந்த ஏர் இந்தியா, இந்திய விமான சேவையில் மகாராஜா என வலம்வந்தது. தனியார் விமான நிறுவனங்களின் வருகையால் ஏர் இந்தியா இழப்பைச் சந்திக்கத் தொடங்கியது. அண்மையில் அந்நிறுவனத்தின் இழப்பு ரூபாய் 70,000 கோடியைத் தொட்ட நிலையில், ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. எனினும், ஓராண்டாக அதன் விற்பனை சாத்தியப்படாமல் இருந்த நிலையில், டாடா குழுமமே மீண்டும் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டியது. 

 

இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் குழு நடத்திய ஆலோசனையில் டாடா குழுமத்திடம் ஏர் இந்தியாவை விற்பதற்கான நடைமுறை இறுதி செய்யப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை ரூபாய் 18,000 கோடிக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது. 

 

இதன் மூலம் 68 ஆண்டுகளுக்கு முன் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா, தற்போது மீண்டும் அந்நிறுவனத்திடமே வந்து சேர்ந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் விற்கப்பட்டாலும், அந்நிறுவனத்தின் கட்டடங்கள் உள்ளிட்ட ரூபாய் 14,718 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் அரசின் வசமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது பணியாற்றுவோர், ஓய்வுபெற்றோரின் நலன்கள் காக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த விற்பனை இவ்வாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போர் பதற்றம்; விமான சேவை ரத்து!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

air india Flight to Tel Aviv canceled

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போர் பதற்றம் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லியிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 

Next Story

தோழியை விமானி அறையில் அனுமதித்த விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு அபராதம்

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

dgca fine thirty lakhs for air india limited dubai to delhi flight

 

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானியாக இருந்த ஒருவர் தனது பெண் தோழியை விமான பைலட்டின் கட்டுப்பாட்டு அறையான காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது குறித்த புகார் ஒன்று விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) அளிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் இதில் சம்பந்தப்பட்ட பெண் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர் ஆவார். இருப்பினும் இந்த சம்பவம் நடந்த அன்று அந்த பெண் விமானத்தில் பயணியாக சென்றது தெரியவந்தது. பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்த விமானியின் இந்த செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. விமானி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன் அவரது விமான ஓட்டுநர் உரிமமும் 3 மூன்று மாதக் காலத்திற்கு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது விமானியின் இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.