![Action Notification on Half day leave during summer in telangana](http://image.nakkheeran.in/cdn/farfuture/aiqbTOt_9MM6rM_tvVuFfLCd4oCZJmZJmw5ZGP-vU8E/1709518084/sites/default/files/inline-images/schoolleave-ni.jpg)
நடப்பாண்டில், இந்தியாவில் கோடை காலம் வழக்கத்தை விட அனலாக தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெலங்கானா, ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகம், மராட்டியம், ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும் என்று கூறியிருந்தது. அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும் என்றும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பமும், குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது.
கோடை காலத்தை ஒட்டி, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி மாநில அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அரைநாள் மட்டுமே செயல்படும். அதன்படி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். காலை வகுப்புகள் முடிந்ததும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில்,10ஆம் வகுப்புக்கு மட்டும் மதிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். காலையில் தேர்வுகள் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய பிறகு, மதிய வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.