Skip to main content

"2019 தேர்தலில் ஜனநாயகத்தை அபகரித்துவிட்டனர்" - மத்திய அரசு மீது காங். சரமாரி குற்றச்சாட்டு!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

congress

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம், விசாரணை குழு அமைத்துள்ளது.

 

இந்தநிலையில் இந்தநிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அந்தநாடுகள் அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்து விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில், 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது. இது இந்திய அரசியல் வட்டாரங்களில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெகாசஸை பயன்படுத்தியதன் மூலம் மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தநிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாவது: இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகாசஸை சட்டவிரோதமாகவும்  அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் உளவு பார்க்க மோடி அரசு பயன்படுத்தி வந்தது, இதில் மோடிக்கும் சம்மந்தம் உள்ளது என நீண்டநாட்களாக கூறி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அவர்கள் மக்களின் பணத்தை, தங்களது சொந்த மக்களைக் உளவுபார்க்க பயன்படுத்தியுள்ளார்கள். 2019 மக்களவைத் தேர்தலின்போது ஜனநாயகத்தை அபகரித்துள்ளனர். இது தேசத்துரோகச் செயல்

 

பெகாசஸை வாங்கியது மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக நேரடியாக கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு தவறாக வழிநடத்தியுள்ளது. மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில், தன் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி மறுத்துள்ளது. பிரதமர் மோடியின் பயணத்தின்போது இஸ்ரேலிடம் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உளவு சாதனங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஒரு தொகுப்பின் மையப்பொருளாக மோடி அரசாங்கம் பெகாசஸ் உளவு மென்பொருளையும், பிற ராணுவ தொழில்நுட்பங்களையும் கடந்த 2017 ஆம் ஆண்டு வாங்கியுள்ளது. 2017-18ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் செயல்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் (NSCS) பட்ஜெட் 33 கோடி ரூபாயில் இருந்து 333 கோடி ரூபாயாக உயர்ந்தது தற்செயலான நிகழ்வு அல்ல.

 

ராகுல் காந்தி மற்றும் அவரது ஊழியர்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் எச்டி குமாரசாமி, பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய அமைச்சர் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், அவரது மனைவி மற்றும் ஊழியர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கான சிறப்பு அதிகாரி, மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையம், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், எல்லை பாதுகாப்பு படை தலைவர் கே.கே.சர்மா, ரா அதிகாரி ஜிதேந்தர் குமார் ஓஜா, அவரது மனைவி, இந்திய ராணுவ அதிகாரிகள் கர்னல் முகுல் தேவ் மற்றும் கர்னல் அமித் குமார் ஆகியோரை உளவு பார்க்க மோடி அரசு பெகாசஸை பயன்படுத்தியுள்ளது.

 

பெகாசஸ் உளவு மென்பொருள் இலக்கு பட்டியலில், வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும், தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி மின்ட், தி வயர், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டிவி18, தி ட்ரிப்யூன், அவுட்லுக், டிஎன்ஏ, நியூஸ்கிளிக் ஆகிய முக்கிய ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அரசாங்கம் பாராளுமன்றத்தை ஏமாற்றியுள்ளது. காங்கிரஸ் மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேசி, இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்த வியூகத்தை வகுக்கும். இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.