Aam Aadmi MLA says I will shave my head if Modi becomes PM

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாகமக்களவைத் தேர்தல் நடைபெற்று இன்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது.

இதற்கிடையில், 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ரிபப்ளிக் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க கூட்டணி 359 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் 30 இடங்களில் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா பொருத்தவரை இந்தியா நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க கூட்டணி 371 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களிலும், பிற கட்சிகள் 47 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் பிமார்க் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க 359 இடங்களிலும், காங்கிரஸ் 154 இடங்களிலும், பிற கட்சிகள் 30 இடங்களிலும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

இதே போன்று, சில செய்தி நிறுவனங்கள் பா.ஜ.க 300க்கு அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கருத்துக் கணிப்புகள் அனைத்து தவறானவை என ஜூன் 4ஆம் தேதி நிரூபிக்கப்படும். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும் இந்தியா கூட்டணிக்குக் கிடைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன்” என்று கூறினார்.