Skip to main content

கடந்த ஆண்டு 8,700க்கும் மேற்பட்டோர் தண்டவாளங்களில் பலி -  இரயில்வே வாரியம் தகவல்!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

migrant workers

 

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ரயில்வே தண்டவாளங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வியெழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 8,700 பேருக்கும் மேற்பட்டவர்கள் ரயில்வே தண்டவாளங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக ரயில்வே வாரியம், மாநில காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2020 வரை ரயில்வே தண்டவாளங்களில் 805 பேர் காயமடைந்துள்ளனர். 8,733 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளது. 2020ஆம் ஆண்டில் தண்டவாளங்களில் பலியானோரின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய நான்கு வருடங்களில் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட குறைவானதுதான் என்றாலும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சில மாதங்களுக்குப் பயணிகள் இரயில் ஓடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

 

இதற்கிடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான இந்த தகவல் குறித்துப் பேசிய இரயில்வே அதிகாரிகள், 2020ஆம் ஆண்டு இரயில்வே தண்டவாளங்களில் இறந்தவர்களில் பெரும்பான்மையானோர், தண்டவாளம் வழியாக தங்கள் ஊருக்கு நடந்து செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் என தெரிவித்துள்ளனர். தங்கள் ஊருக்குச் செல்லும் சாலை வழியைவிட, தண்டவாளப்பாதை தூரம் குறைந்தது என கருதிய புலம்பெயர் தொழிலாளர்கள், தண்டவாளத்தில் நடந்து தங்கள் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்ததாக அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

மேலும் ஊரடங்கை மீறியதாக காவல்துறையிடம் சிக்குவதிலிருந்து தப்பிக்கவும், வழிமாறி செல்லாமல் இருக்கவும் புலம்பெயர் தொழிலாளர்கள் தண்டவாளத்தில் நடந்தது போக முடிவு செய்ததாகவும், ஊரடங்கு என்பதால் எந்த ரயில்களும் ஓடாது என அவர்கள் கருதினார்கள் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சரக்கு இரயில்கள் உள்ளிட்டவை இயங்கின என்பதும், சரக்கு இரயில்கள் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்த சம்பவங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.