
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 724 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து நேற்று (11.07.2021) ஒரேநாளில் 39,649 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை 3 கோடி பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.08 கோடியாக உள்ளது. இந்தியாவில் தற்போது 4.50 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் சீராக குறைந்துவருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4.08 லட்சமாக உள்ளது.