
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதால் தமிழகத்தில் பொறியியல், துணை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி மாணவர் சேர்க்கையும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி சுமார் 15 லட்சம் மாணவ, மாணவியர் காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் காலதாமதமாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்வுகள் தாமதமாக நடைபெற்றது உள்பட, இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ உடனடியாக வெளியிட வேண்டும்; புதிய கல்விக்கொள்கையை எதிர்க்க இதுவே காரணம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.