Skip to main content

“ஆப்பிரிக்கா வானத்தின் நட்சத்திரம் விழுந்தது... யூசுப் அல் கர்ளாவி மரணம்” - தமிமுன் அன்சாரி 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Yusuf Al Garlawi tamimun ansari

 

ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார். அவரது இழப்பு ஆழ்ந்த துயரத்தை தருகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை தருகிறது. முரண்பாடுகளில் உடன்பாடு என்ற கொள்கையுடன் கருத்து இணக்கத்தை வலியுறுத்தி அவர் எழுதிய நூல்களும், ஆற்றிய உரைகளும் காலம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாக்கம் உடையவை. 

 

காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர் வழங்கிய மார்க்க வழிகாட்டல்களும், இறைத்தூதரின் போதனைகளின் ஊடாக அவர் சுட்டிக்காட்டிய விஷயங்களும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளையும் கடந்து மேலை நாட்டார்களையும் கவர்ந்தது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், அவர் எடுத்துரைத்த கருத்துக்களை வழி மொழிந்தனர். சமகால சிக்கல்களை எளிதாக அணுகி, பாறைகளை போல தோற்றமளித்த விவகாரங்களில், பனித்துளிகளை போல தீர்வுகளை தந்தவர் என்ற அடிப்படையில் அவரது இழப்பு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். 

 

நேர நிர்வாகம், நாம் பிரித்து விட வேண்டாம், முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்.?, திருக்குர்ஆன் கூறும் பொறுமை, இளைஞர்களே... நாங்கள் உங்களிடம்  எதை எதிர்பார்க்கிறோம்.? முரண்பாடுகளில் உடன்பாடு, இஸ்லாம் நடுநிலை மார்க்கம், உள்ளிட்ட இவரது 120 நூல்களின் அணிவகுப்புகள் பிரமிப்புகளை தருபவை.

 

மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, எது முதலில்.? என்ற நூல் மிகப்பெரிய அறிவுக்கொடையாகும். 'சமூக பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜகாத்தின் பங்கு' என்ற இவரின் ஆய்வு கட்டுரை வறுமை ஒழிப்பை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஃபத்வாக்கள் மற்றும் ஆராயச்சிக்கான ஐரோப்பிய மையத்தை இயக்கியதும், அல்ஜெரியா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளில் அறிவொளி பணிகளை நிறுவனமயப்படுத்தியதும், மார்க்க விவகாரங்களில் சீர்திருத்த அணுகுமுறைகளை மேற்கொண்டதும் இவரது ஆளுமைகளை பறைசாற்றியது. 

 

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திர வாழ்வுக்காவும் அவரது இதயம் துடித்த கொண்டே இருந்தது. உலகெங்கும் பரவிய தீவிரவாதத்தையும், தீவிரவாத குழுக்களையும் கடுமையாக எதிர்த்த இவரது துணிச்சலும்  பாராட்டத்தக்கது. Other Side of news என்று உலகை உலுக்கி வரும் அல்ஜெஸீரா பன்னாட்டு ஊடகத்தை உருவாக்கியதில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும். இது குரலற்ற மக்களின் குரலை ஒளிபரப்புகிறது. இதன் உருவாக்கத்தில் ஆணிவேராக திகழ்ந்த யூசுப் அல் கர்ளாவியை ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

 

தான் பிறந்த எகிப்து நாட்டில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திட அவர் ஆற்றிய பணிகள் அவரை நாடு துறக்க செய்தது. பிறந்த மண்ணிலிருந்து அகதியாய் செல்ல வழிவகுத்தது. அவர் தொடர்ந்து கத்தாரில் முகாமிட்டு உலகெங்கும் அறிவொளியை சமரசமின்றி, இடையுறாது  பரப்பி வந்தார். அவரது காணொளிகளை வலை தளங்களில் லட்சக்கணக்காணோர் தினமும் கண்டு பயனடைகிறார்கள். மாணவர்களாக மாறி மகிழ்கிறார்கள். இன்று அவர் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். 

 

ஆப்பிரிக்க வானின் நட்சத்திரம் விழுந்து விட்டது. வளைகுடாவில் ஒளி வீசிய முத்து மீண்டும் சிப்பிக்குள் சென்று விட்டது. ஓரிறை உலகம் ஒப்பற்ற மேதையை இழந்திருக்கிறது. பக்குவமும், முதிர்ச்சியும், இணக்கமான சிந்தனைகளும் நிறைந்த ஒருவரை இழந்த வருத்தம் வாட்டுகிறது. இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறப்புற பிரார்த்திக்கிறோம். ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்”  - மு.தமிமுன் அன்சாரி

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

“Let's give voice to the democratic rights of journalists” - M. Tamimun Ansari

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்த வகையில் மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் பின், செய்திகளை புலனாய்வு செய்த 'நக்கீரன்' இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ், ஒளிப்பதிவு கலைஞர் அஜீத் குமார் ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மஜக வன்மையாக கண்டிக்கிறது. ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

Next Story

“திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்” - அதிமுக குறித்த கேள்விக்கு தமிமுன் அன்சாரி

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

"Dravidian parties must be protected" - Tamimun Ansari

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சேலம் சென்றிருந்தார். இந்நிலையில் சேலத்தில் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இன்று முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் V.P சிங் அவர்களின் 92வது பிறந்தநாள், அவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் 27% சதவீத இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்த மண்டல் கமிஷனை அமல்படுத்தியவர். இதனால் உயர்சாதியினரின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். அவர் இறந்த பிறகும், இப்போதும் கூட கோபத்தில் அவரது வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள். 

 

தமிழக மக்களிடம் அவருக்கு மரியாதை இருக்கிறது. அவரது பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரால் தமிழக அரசு ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்க வேண்டும் என மஜகவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அப்பல்கலைக்கழகம் என்பது டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக பாடத் திட்டத்தை ஒத்திருக்க  வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். 

 

பாஜகவினரால் உலக அளவில் இந்தியாவுக்குச் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. பாஜக மக்களைப் பதட்டத்திலேயே வைத்துக் கொள்ள விரும்புகிறது. உண்மையான பிரச்சனைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் அரசியலைச் செய்கிறது. மக்களைப் பிளவுபடுத்தி தங்களது அரசியல் அதிகாரத்தைத் தக்க வைக்கத் துடிக்கிறது. பாஜக பிரமுகர் நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய  நிலையில், அவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியிருக்கிறார். அதை அவர் மறுக்கவில்லை. நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும். அவரால் உலக அளவில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகமெங்கும் இக்கோரிக்கையை வலியுறுத்தி மஜக சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.  

 

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “அதிரடியாக அறிக்கை விடுவதாலேயே ஒருவர் (அண்ணாமலை) பெரிய தலைவராகி விட முடியாது. மக்கள் செல்வாக்கு தான் முக்கியம். பிறரை விமர்சித்து, தன்னை வளர்த்துக் கொள்ளும் அரசியல் தவறானது. அதிமுகவில் நடப்பது, அவர்களின் உட்கட்சி விவகாரம். 'கழகங்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற முழக்கத்தை பாஜக தமிழகத்தில் முன்வைத்து வரும் நிலையில், திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலை. குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின பெண்  திரெளபதி முர்மு, வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவரை முன்னிறுத்துபவர்கள் யார்? என்பது முக்கியமானது. ஜனநாயக கட்டமைப்புகளை சீரழிக்கும் பாஜக அவரை முன்னிறுத்துகிறது. எனவே எதிர்க்கட்சிகள் நிறுத்தும் ஜனநாயக சிந்தனை மிக்க பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்” என்றார்.

 

இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் சாதிக் பாட்சா, AJS தாஜுதீன், மாவட்ட அமைப்புகுழு உறுப்பினர்கள் அஸ்லம் கான், சனாவுல்லா கான், அக்மல் ஹுசேன், அப்ரார் பாஷா, ஜான், ஜபிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.