Skip to main content

மக்களவைத் தேர்தல்; 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
Phase 6 voting has started at Lok Sabha elections

மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 428 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25-05-24) 7 மணியளவில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் நடைபெற இருந்தது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. அதன்படி, இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி வருகிறது. இதற்காகப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

அதன்படி, பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணிக்காக அனைத்து தொகுதிகளுக்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான, மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 2 ஆம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு கடந்த 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போல், முதல் கட்டமாக 28 இடங்களுக்குக் கடந்த 13 ஆம் தேதி 4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
TN is forever a Dravidian fortress CM MK Stalin

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு நிறைவு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என ‘முப்பெரும் விழா’ கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று (15.06.2024) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களைப் பேசினார்கள். தமிழர்கள் குறித்து அவதூறு பரப்பினார்கள். வாட்ஸ் ஆப்பில் பொய்ச் செய்திகளைப் பரப்பினார்கள். இவ்வளவும் செய்தும் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. இப்போது அவர்கள் பெற்றிருப்பது வெற்றியல்ல தோல்விதான். பாஜகவிற்கு அதிக பெரும்பான்மை இருந்தபோதே, வாதங்களால் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நமது எம்.பி.க்கள். இப்போது, மக்களுக்கான நமது குரல் நாடாளுமன்றத்தில் இன்னும் வலுவாக ஒலிக்கப் போகிறது. திமுக தொண்டர்களாலும், கூட்டணிக் கட்சிகளாலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது. திமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த வெற்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். 

TN is forever a Dravidian fortress CM MK Stalin

நாடாளுமன்ற உறுப்பினர்களே நாங்களும், தமிழ்நாட்டு மக்களும் உங்கள் தோளில் ஏற்றி வைத்திருக்கும் இந்தக் கடமைகளுக்காக தமிழ்நாட்டு உரிமைகளுக்காக, நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுங்கள். பலம் பொருந்திய எம்.பி.க்கள் சேர்ந்து, பலவீனமான மைனாரிட்டி பாஜக அரசை பாசிச பாதையில் செல்லாமல் தடுங்கள். ஒற்றுமை உணர்வுடன் கொள்கை திறத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும். நம்முடைய உறுப்பினர்கள்தான் பாஜகவைக் கொள்கை, கோட்பாடுகள் ரீதியாக அம்பலப்படுத்தினார்கள். கொள்கை ரீதியாக அவர்களுடைய வகுப்புவாதத்தை, எதேச்சாதிகாரத்தை, பாசிசத்தை விமர்சிக்கின்ற பாணியை இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தவர்கள் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். சமூகநீதிக்காக இந்திய நாடாளுமன்றத்தில் அதிகமாக உரிமைக்குரல் எழுப்பியது மூலமாக, இந்திய அரசியல் செல்ல வேண்டிய பாதையைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டுக் கொடுத்தார்கள்.

எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து குளோஸ் (Close) செய்துவிட்டார். அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது. 

TN is forever a Dravidian fortress CM MK Stalin

அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை என்று நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளார்கள். அதற்கு நன்றி. 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பவர்களுக்கு சொல்வது. மெஜாரிட்டி பாஜக இருக்கும்போதே நாடாளுமன்றத்துக்குள் முழங்கியவர்கள் மைனாரிட்டி பாஜகவிடமா அடங்கிப் போவார்கள். வெயிட் அண்ட் சி (Wait and See)” எனத் தெரிவித்தார். 

Next Story

“இந்தியா எதிரி நாடுதான் இருந்தாலும்...” - பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Pakistan Opposition Leader says Though India is an enemy country

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. கடைசிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் ஜூன் 4ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டன. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது, தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலை இந்தியா சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தியதற்காகப் பாராட்டியதோடு, தனது நாட்டிலும் இதேபோன்ற செயல்முறையை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் செனட்டில் பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், “எதிரி நாட்டின் உதாரணத்தை நான் மேற்கோள் காட்ட விரும்பவில்லை. இருந்தாலும் சமீபத்தில், அங்கு (இந்தியா) தேர்தல்கள் நடத்தப்பட்டன.  800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான வாக்குச் சாவடிகள் இருந்தன. சில வாக்குச் சாவடிகள் ஒரு இடத்தில் ஒரு வாக்காளருக்காகவும் அமைக்கப்பட்டன. ஒரு மாத காலப் பயிற்சி முழுவதும் இ.வி.எம்கள் மூலம் நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததா என்று இந்தியாவில் இருந்து ஒரு குரல் கூட கேட்கவில்லை. 

எவ்வளவு சீராக மின்சாரம் பரிமாறப்பட்டது. நாமும் அதே நிலையில் இருக்க விரும்புகிறோம். இந்த நாடு சட்ட உரிமைக்காகப் போராடி வருகிறது. இங்கே, வாக்கெடுப்பில் தோற்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேலும் வெற்றியாளரும் அவரது சொந்த விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்படியான அணுகுமுறை நமது அரசியல் அமைப்பை வெறுமையாக்கியுள்ளது” என்று கூறினார்.