Skip to main content

நக்கீரன் குறித்து பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது காவல்துறையிடம் புகார்...

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

நக்கீரன் நிறுவனம் குறித்து சமூகவலைதளங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

dinasari


கடந்த மே மாதம் 08-10 நக்கீரன் இதழில் " அரசு உதவி பெறும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடைபெறுவதாக அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஒரு சிலர் நக்கீரனுக்கு தகவலளித்தனர். இதனை அடிப்படையாகக்கொண்டு நக்கீரன் இதழ் இந்த விவகாரம் குறித்து தீர விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பேட்டியெடுத்து, அதனை கட்டுரையாக வெளியிட்டது. 

இந்நிலையில் கடந்த 14.05.2019 அன்று 'தமிழ் தினசரி' என்ற இணையதளத்தில், இந்த கட்டுரை தொடர்பாக நக்கீரனை மிரட்டும் வகையில் பதில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டது. "நக்கீரன் அலுவலகத்தில் கள்ளநோட்டு அடிக்கிறார்கள், திடுக்கிடும் தகவல்! இனி நாங்களும் சொல்லலாமே" என ஆரம்பித்த அந்த கட்டுரை நக்கீரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், நக்கீரனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், பத்திரிகை சுதந்திரத்தை கெடுக்கும் வகையிலும் அமைந்தது. 
 

dinasari



சென்னை மைலாப்பூர் முகவரியிலிருந்து இயங்கி வரும் இந்த தினசரி(dhinasari.com) இணையதளத்தில் பொதிகைச்செல்வன் என்பவர் இந்த கட்டுரையை எழுதியிருந்தார். எனவே நக்கீரனுக்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிராக செயல்பட்டு பொய்யான செய்திகளை பரப்பிய குறிப்பிட்ட அந்த இணையதளத்தின் மீதும், கட்டுரை ஆசிரியர் பொதிகைச்செல்வன் மற்றும் அந்த இணையதளத்தின் உரிமையாளர் செங்கோட்டை ஸ்ரீராம் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடந்த ஆண்டின் இறுதியில் நக்கீரன் இதழுக்கும், அதன் ஆசிரியரின் பெயருக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய சிலரின் மீது கொடுத்த புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளது. அதனுடன் சேர்த்து இதனையும் விசாரித்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையாளரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்