Skip to main content

கேரளா கொடுக்கும் அணை சிக்கல்கள்; தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Kerala Dam Issues;  farmers struggle

சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து உரிய அனுமதிப் பெறாமல் நடத்தப்படும் சிலந்தி ஆற்றின் தடுப்பணைக் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் எனக் கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கேரளாவின் மூணாறு செல்லும் சோதனை சாவடி பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அமராவதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவது தமிழக நீர் வளத்தை பாதிக்கும். வறட்சி காலத்தில் இது மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். எனவே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேரள அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nn

அதேபோல் மறுபுறம், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான அனுதியை மத்திய அரசிடம் கேரள அரசு கோரியுள்ளது. கேரள அரசின் இந்த முன்மொழிவு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் முல்லை பெரியாறு அணை மூலம் நீராதாரம் பெற்று வருகிறது. இந்த அணையால் 5 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு மட்டுமல்லாது ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் முல்லை பெரியாறு அணை உள்ளது.

இந்நிலையில் கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது. கேரள அரசு கொடுத்துள்ள மனுவில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் கடந்து விட்டது. அணை பலவீனமாக இருப்பதால் இந்த அணை உடைந்தால் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள். எனவே முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள வண்டிபெரியாறு பகுதியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் புதிய அணை கட்டி முடிக்கப்படும். புதிய அணை கட்டி முடிக்கப்பட்டு ஏற்கனவே உள்ள அணை இடிக்கப்படும். அப்படி இடிக்கப்படும் பட்சத்தில் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி தமிழகத்திற்கு வழங்கப்படும் நீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கேரளாவின் இந்த புதிய அணை கட்டுவதற்கான முன்மொழிவுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக தேனி மாவட்ட விவசாயிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தேனியில் லோயர்கேம்ப் பகுதியில் தமிழக விவசாய சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கேரளாவிற்குச் சுற்றுலா சென்ற மாணவர் உயிரிழப்பு; துரை வைகோ எம்பி-யின் துரித நடவடிக்கை!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
tn student who passed away Kerala sent his hometown by action Durai Vaiko

பட்டயக் கணக்காளருக்கு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த 12 மாணவர்கள் நேற்று(20.6.2024) இரவு கேரளா மாநிலம் வர்காலாவுக்கு சுற்றுலாவாகச் சென்றுள்ளார்கள். 12 பேரில் 7 பேர் மாணவர்கள், 5 பேர் மாணவிகள். பட்டயக் கணக்காளர் படிப்புக்கான இடைநிலை தேர்வை முடித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இன்று(21.6.2024) காலை வர்காலாவில் உள்ள கடலுக்குச் சென்றுள்ளார்கள். கடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ரகு என்ற மாணவனை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவின் உடல் கரை ஒதுங்கியிருக்கிறது.

ரகுவின் உடலைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ரகு உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த  ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, உடனடியாக திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு பேசினார். ரகுவின் நிலைமையை எடுத்துச் சொல்லி மற்ற மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளரையும் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று உதவிடுமாறு தெரிவித்து உள்ளார். அவரும் மாணவர்களை பத்திரமாக தமிழகம் அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகின்றார். துரை வைகோவின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அப்பகுதி வட்டாட்சியரை நேரில் அனுப்பி உள்ளார்.

எதிர்பாராத விதமாக இறந்த ரகுவிற்கு பிரதப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை விரைந்து முடிக்கவும், மற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்கவும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மாணவர்களைப் பத்திரமாக அனுப்பும் பணியில் துரிதமாக செயல்பட்ட திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள சசி தரூருக்கு துரை வைகோ தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Next Story

 வீராணம் ஏரி நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Farmers are happy as Veeranam lake is full

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெருகிறது. 

இதனால் இந்த வட்டப் பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கும்பகோணம் அருகே உள்ள கீழ் அணையில் தேக்கப்பட்டு அதிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும்.

இந்த ஏரியிலிருந்து தொடர்ந்து தண்ணீர் சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும் கடும் வெயில் காரணமாகவும் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டதாலும் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஏரி வறண்டது. சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பிடும் வகையில் தமிழக அரசு சிறப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி கடந்த மாதம் 17ம் தேதி மேட்டூரில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த மாதம் 26 ஆம் தேதி கீழணைக்கு வந்து சேர்ந்தது. அன்றே கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 

வெள்ளிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி நிரம்பியது. கீழனையில் இருந்து ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் பாதுகாப்பை கருதி  விஎன்எஸ்எஸ்  வடிகால் மதகு வழியாக விநாடிக்கு150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 9 அடி ஆழம் உள்ள கீழணையில் 4.1 அடி வரை தண்ணீர் உள்ளது. ஏரி நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாய பாசனத்திற்கும் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.