Skip to main content

மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவைத்த கொடூரம்! - உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்! 

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

Kayatharu issue

 

தூத்துக்குடி மாவட்டத்தின், மரணம் வரினும் மண்டியிடாத சுதந்திரப் போராட்ட வீரமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு நகரின் அருகிலுள்ளது ஓலைக்குளம் எனும் கிராமம். பட்டியலினத்தவர்கள், தேவர்சமூகம், நாயக்கர், யாதவர் என்று பலதரப்பட்ட சமூக மக்களை உள்ளடக்கிய சுமார் 50 வீடுகளைக் கொண்ட 250 பேர்கள் வாழும் பூமி. 

 

அடித்தட்டு வர்க்கத்தினரையே கொண்ட இங்கு பிரதானத் தொழில் சொல்லிக் கொள்கிறமாதிரி இல்லை என்றாலும் ஓரளவு விவசாயம், ஆடு மேய்த்து வளர்ப்பதே தொழிலாக இருக்கிறது.

 

ஆடுகள் மேய்க்கும் போது கூட பிறசமூகத்தவர்கள் அது பட்டியலின மக்கள் என்றாலும் ஒன்றாகவே இணைந்து மேய்ப்பதுண்டு. தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர், யாதவர் மற்றும் பட்டியலின தலித் பிரிவு சமூகத்தின் மூன்று பேர்களும் இணைந்து தொடர்ந்து ஆடு மேய்த்திருக்கிறார்கள். 

 

இதில் அங்குள்ள சிவசங்கு தன்னுடைய ஆடுகளை தனது வீட்டின் பின்புறமுள்ள இடத்தில் அடைப்பதுண்டு. ஆடு காணாமல் போன விஷயத்தில் சிவசங்குவிற்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பால்ராஜ்க்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. 

 

இந்த நிலையில், கடந்த வாரம் பால்ராஜ், சிவசங்குவின் காலில் விழுந்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு சாட்சியாக சங்கிலிபாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் ஆகியோர் அங்கு இருந்துள்ளனர். 

 

thol thirumavalavan

 

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு, “#அநாகரிகம்: வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் தொடரும் அநாகரிகம். கயத்தாறு அருகே ஓலைக்குளம் கிராமம் ஆதிக்குடியினத்தைச் சார்ந்தவரின் ஆடுகள் தங்களின் கொல்லைப் பகுதியில் எப்படி நுழையலாமென இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளனராம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

அதைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலானது. பால்ராஜின் புகாரின் பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர், சிவசங்கு உள்ளிட்ட சாட்சிகளான மேற்கண்ட அத்தனை பேர்களின் மீதும் தீண்டாமை வழக்குப் பதிவு செய்திருக்கிறார். டி.எஸ்.பி.யான கலைக் கதிரவன் இந்த விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்.

 

Chelladurai.N

 

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லதுரை, “பால்ராஜிடம் கொஞ்சம் ஆடுகள் இருந்தன, அங்குள்ள ஆதிக்க சமூகத்தினரும் ஆடுகள் வைத்திருக்கின்றனர். அப்போது இந்த பால்ராஜின் ஆடுகள், அந்த ஆதிக்கச் சமூகத்தினரின் ஆடுகளுடன் அடைத்து வைத்துள்ள இடத்திற்கு உள்ளே போய்விட்டது. உடனே பால்ராஜ், தனது ஆட்டை வெளியே ஓட்டிவரச் சென்றுள்ளார். 

 

Ad

 

இதனை அங்கிருந்தவர்கள் பார்த்தவுடன் பிரச்சனையாகியுள்ளது. பால்ராஜிடம் வாய்த்தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை அடித்துக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். பால்ராஜுக்கு திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள். காலில் விழ வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் இந்தச் சமூகத்தில் நடக்கக் கூடாது” என்று கூறினார்.

 

இதேபோல் இந்தச் சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

பிரிட்டன் முழுவதும் விமான சேவை முடங்கியது!

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Flight services across Britain are suspended

 

பிரிட்டன் முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை முடங்கி உள்ளது.

 

பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அருகில் இருந்த விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்கின. அதே சமயம் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக பிரிட்டன் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.