Skip to main content

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

The central government has called for an all-party meeting 

 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 15 நாட்கள் நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 4 ஆம் தேதி (04.12.2023) தொடங்க உள்ள நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி (02.12.2023) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனர். இதனையொட்டி அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

 

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதால், இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்