Skip to main content

பொதுமக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்: ஆவின் பால் பண்ணையை மூடி சீலிட்டு பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: பால் முகவர்கள் சங்கம் 

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

aavin



"பொதுமக்கள் உயிரோடு விளையாடாதீர்கள், ஆவின் பால் பண்ணையை மூடி சீலிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கு கரானா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தத் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (02.05.2020) மாலை முதல் ஆவின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, கடந்த இருதினங்களாக வடசென்னை பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் தடைபட்டு அதன் காரணமாக ஆவின் பாலினை பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதோடு, பொதுமக்களும் ஆவின் பால் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர்.


கரானா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்த போதே ஆவின் பால் பண்ணைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், அங்குப் பணியாற்றும் ஊழியர்களுக்கும், பால் முகவர்களுக்கும் முகக்கவசம், கையுறை, சானிடைசர் வழங்கிட வேண்டும், மாவட்ட குளிரூட்டும் நிலையங்களில் (CMC, BMC) இருந்து பால் பண்ணைகளுக்கு பால் கொண்டு வரும் வாகனங்களையும், பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய ஏற்றச் செல்லும் மொத்த விநியோகஸ்தர்களின் வாகனங்களையும் முறையாக கிருமி நாசினி தெளித்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்,
 

PONNUSAMY

 

அது போல் அந்த வாகனங்கள் பால் விநியோகத்திற்குப் பால் பண்ணையில் இருந்து வெளியேறும் போதும் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு கரானா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதை உறுதி செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆவின் நிர்வாகத்திற்கும், பால்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வருக்கும் ஏற்கனவே கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம்.

 

ஆனால் தமிழக அரசு கோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் எப்படி மெத்தனப் போக்கோடு நடந்து கொண்டதோ அது போலவே அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால்வளத்துறையின் ஆவின் பால் பண்ணைகளிலும் மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வந்திருப்பது கடும் அதிர்ச்சியைத் தருகிறது.


உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆவின் நிறுவனம் மட்டுமே செயல்படுவது போல் சித்தரித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது துறையின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


கரானா நோய் தொற்றானது வெப்பநிலையை விட குளிர் நிலையில் நிலைத்து நின்று தாக்கும் வல்லமை கொண்டது என்பதால் மாதவரம் ஆவின் பால் பண்ணையைக் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு விடுமுறை அளித்து, சீலிட்டு பால் பண்ணை முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே ஆவின் பால் பண்ணையைச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
 

http://onelink.to/nknapp

 

மாதவரம் ஆவின் பால் பண்ணை மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் வரை பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்திட மாற்று ஏற்பாடுகளைத் தமிழக அரசு விரைந்து செய்து பொதுமக்களின் பாதுகாப்பினையும், பால் விநியோகத்தையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.