Skip to main content

”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

ஒரு சமுதாயம் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் 'அனைவருக்கும் கல்வி' அளிக்க வேண்டும் என்ற உண்ணதமான கனவோடு 16,000  பள்ளிகளை  திறந்தார் கர்மவீரர் காமராஜர். அந்தக் கனவை காற்றிலே பறக்க விட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பள்ளிகளை மூடுவதற்கு திட்டமிடுகிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.

 

govt school students



அரசுப்பள்ளி வேண்டும் என்று கூறிய காலம் மாறி, அரசுப் பள்ளியே வேண்டாம் என்று கூறும் நிலைக்கு மாறிவிட்டனர் இன்றைய பொதுமக்கள். தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் ஆங்கில வழி மோகம் மக்களை வெகுவாக தனியார் பள்ளியை நோக்கி படையெடுக்க வைத்தது. இதன் விளைவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த கல்வியாண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில்பத்திற்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர் என்கிறது தமிழக அரசு.  இப்பள்ளிகள் அனைத்தும் மூடும் அபாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. இதுபோல் மூடும்  நிலையில் வெறும் ஆறு மாணவர்களோடு இருந்த பள்ளியில் 55 மாணவர்ளை சேர்த்து  மீட்டெடுத்திருக்கிறார்கள் ஒரு கிராம மக்கள்.


 

govt school

                                                                            மாற்றத்திற்கு முன்

நெல்லை மாவட்டத்தில் உள்ள கருவநல்லூர் கிராமத்தில் கடந்த 50 வருடங்களாக செயல்பட்டு வந்தது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இந்த கல்வியாண்டின்(2018-19) தொடக்கத்தில் வெறும் ஆறு மாணவர்கள் மட்டுமே படித்ததால், பள்ளி மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.இதை உணர்ந்த இக்கிராமத்து இளைஞர்கள் பள்ளியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இக்கிராமத்திலிருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கூட்டம் போட்டு, பள்ளி மூடும் அபாயத்தையும், பள்ளியை  மூடிவிட்டால் திரும்ப பள்ளியைத் திறப்பது கடினம் என்பதையும் கூறி கருத்து  கேட்டுள்ளனர். அதற்கு பொதுமக்கள், “தனியார்  பள்ளியில் அடிப்படை  வசதிகள்,  வாகன வசதிகள், ஆங்கில வழிக்கல்வி மற்றும் எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற வசதிகள்  இருக்கிறது. ஆனால் இந்த அரசுப் பள்ளியில் எதுவும் கிடையாது, இதை சரிசெய்தால்  நாங்கள் எங்கள் பிள்ளைகளையும் சேர்க்கிறோம்” என்று கூறிவிட்டனர்.        

அரசு பள்ளி

                                                                             மாற்றத்திற்கு பின்

உடனடியாக களத்தில் இறங்கிய இளைஞர்கள் மானூர் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.கீதா அவர்களை சந்தித்து பள்ளிக்கு நிலையை எடுத்து கூறி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கான அனுமதியை பெற்றனர். இதனை அறிந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை இதே அரசுப் பள்ளியில் சேர்க்கத் தொடங்கினர். அதோடு நிறுத்தாமல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை தொடங்கி அதன் மூலம் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளையும் தொடங்கி, அதற்காக ஆசிரியரையும் நியமித்தனர்.பள்ளியின் கட்டமைப்பை சரிசெய்ய திட்டமிட்ட இளைஞர்கள், ’அரசுப் பள்ளியை  மீட்போம்’ என்ற வாட்சப் குழுவை ஆரம்பித்து பள்ளிக்காக உதவி கேட்டுள்ளனர். இதை  பார்த்த பலரும் அவர்களால் முடிந்த பணத்தை உதவியுள்ளனர். மேலும் இதையறிந்த  வியட்நாம் நாட்டில் வாழும் தமிழர்கள் 50,000 ரூபாய் அளித்து பேருதவி  செய்திருக்கிறார்கள். இப்பணத்தை வைத்து பள்ளியின் கட்டமைப்பை சரிசெய்துள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்களிடம் உதவிகளை நாடியதில் பள்ளிக்கு தளம் அமைத்தல்,  சுவர்களுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் இரண்டு கணினிகளையும் வழங்கியிருக்கிறார்கள்.

இதையறிந்த நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் திரு.சுகபுத்ரா மற்றும் இணை ஆட்சியர் லெக்‌ஷ்மி ப்ரியா அவர்களும் பள்ளியை பார்வையிட்டு, பள்ளிக்குத் தேவையான சுற்றுச்சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இணைந்து விளையாட்டுப் பொருட்களை அளித்தனர். சமீபத்தில் இதற்கான விழா நடைபெற்றது.அறியாதவர்கள் கூட உதவுவதை அறிந்து நெகிழ்ந்த அருகிலுள்ள கிராம மக்களும் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்கத் தொடங்கினர். இவர்களுக்காக பள்ளியில் இருந்து வேன் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். வெறும் ஆறு மாணவர்களாக  இருந்த இப்பள்ளி இப்போது 55 மாணவர்களோடு “அரசுப் பள்ளியை மீட்போம்,  கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவோம்” என்ற உயரிய லட்சியத்தோடு முன்  உதாரணமாக விளங்குகிறது. பலரும் இக்கிராமத்தினரை பாராட்டி வருகின்றனர். மேலும் “சிறந்த செயல்பாட்டிற்கான அன்னை தெரசா விருதை” வழங்கி கெளரவித்துள்ளது  அன்னை தெரசா அறக்கட்டளை.இந்த முயற்சியை தமிழக அரசு கையிலெடுத்தால் மட்டுமே தமிழநாட்டில் உள்ள அரசுப்  பள்ளிகளை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் அக்கிராமத்து இளைஞர்கள். பளீரென்று கம்பீரமாக நிற்கிறது பள்ளி.

 

 

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

மாணவிகளிடம் ஆபாசப்படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Government school teacher arrested under pocso

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜியாவுல்ஹக். இவர், தன்னுடைய பள்ளியில் படித்து வரும் மாணவிகளை தனியாக அழைத்து, அலைபேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்து, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் பலர், பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்கள் விசாரித்தபோதுதான், ஆசிரியர் ஜியாவுல்ஹக்கின் தகிடுதத்தங்கள் வெளியே தெரியவந்தன. 

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுபற்றி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் தனம், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னுடைய லீலைகள் காவல்துறை வரை சென்றதை அறிந்த ஆசிரியர் ஜியாவுல்ஹக், திடீரென்று தலைமறைவானார். முதல்கட்ட விசாரணையில் ஜியாவுல்ஹக் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், பிப். 17ம் தேதி ஆசிரியர் ஜியாவுல்ஹக்கை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவரை மத்திய சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், மேச்சேரி சுற்று வட்டாரத்திலும், தொடக்கக் கல்வித்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.