Skip to main content

அந்த ஆனந்தக் கண்ணீருக்காகத்தான் எல்லாமே! - புன்னகையை மீட்டுத்தரும் இளம் டீம்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

“சாக்ராபத்… சாக்ராபத்… என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் அவரிடமிருந்து வரவேயில்லை. அது பெயராகவோ, ஊராகவோ அல்லது அவருக்குத் தொடர்புடைய எதுவாகவோகூட இருந்திருக்கலாம். அதீத குழப்பத்திலும் வாய்ப்புகளைத் தேடினோம். விடை கிடைத்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கும் ஷாகிராபாத்’தான் அது. அவரது பெயர் தப்ரீஷ் அகமது. பின்னர் அவரது குடும்பத்திற்கு தகவல்கொடுத்து, அவர்களின் முன்னிலையே தப்ரீஷ் தொலைந்துபோன காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டோம்” - என்று ஃபாரிஹா சுமன் சொல்வதை ஆர்வமும், ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

 

fariha suman

ஃபாரிஹா சுமன்



ஃபாரிஹா சுமன், 23 வயது இளம்பெண். வேலூரைச் சேர்ந்தவர். சென்னை ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தில் முதுநிலை சமூகப்பணி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். சிறுவயதில் இருந்தே துடிப்பும், சமூக அக்கறையும் கொண்டவரான ஃபாரிஹா, நல்ல ஆதாயம் தரும் வாய்ப்புகள் பல கிடைத்தும், Aspiring Lives அறக்கட்டளையை தொடங்கி சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

manishkumar

மணீஷ்குமார்



அரசு மற்றும் தனியார்த் துறைகளில் மண்டிக்கிடக்கும் ஊழலைப் பொறுத்துக் கொள்ளாமல், லட்சக்கணக்கில் ஊதியம்கொடுத்த வேலைகள், செல்வச் செழிப்பான குடும்பம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்த அறக்கட்டளைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுகிறார் பீஹாரைச் சேர்ந்த மணீஷ்குமார். நிறுவனராக ஃபாரிஹா சுமனும், நிர்வாகத் தலைமையாக மணீஷ்குமாரும் என இருவர் மட்டுமே Aspiring Lives அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.


கடந்த 2017ஆம் ஆண்டே பணிகளைத் தொடங்கி, 2018, மே 08-ல் சட்டப்பூர்வமாக பதிந்துள்ள அவர்களது அறக்கட்டளையின் அடிப்படை நோக்கம் – இளைஞர் மற்றும் சமூக மேம்பாடு. அதன் தொடக்கப்புள்ளியாக வைத்ததுதான் ‘பிரத்யாஷா’ திட்டம். பிரத்யாஷா என்றால் நம்பிக்கை! இந்தத் திட்டத்தின் மூலம் பிறமாநிலங்களில் இருந்து தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து குடும்பத்தைப் பிரிந்ததால் மனநலம் குன்றியவர்களை, அவர்களது குடும்பத்தினரிடமே சேர்த்துவைப்பது.

இதுபற்றி Aspiring Lives நிறுவனர் ஃபாரிஹா சுமனிடம் கேட்டபோது, “ஒரு சிறு தனிமையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது நம்மால். ஆனால், தன் குடும்பத்தினரை, நண்பர்களை கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்கூட பிரிந்திருப்பவர்களைப் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகங்களில் இருப்பார்கள். காப்பகங்கள் எங்களை அணுகி, அவர்களிடம் பேச வைப்பார்கள். பாதிக்கப்பட்ட நபர் திடீரென ஆக்ரோஷம் அடையலாம். அவர்மீது துர்நாற்றம் வீசலாம். நமது பேச்சை சட்டை செய்யாமல் போகலாம். எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ரீ-யூனியனில் இருக்கும் மிகப்பெரிய சவாலே பாதிக்கப்பட்டவரிடமிருந்து தகவலைப் பெறுவதுதான். அதைப் பெற்றுவிட்டாலே வேலைகிட்டத்தட்ட முடிந்துவிடும். கிடைக்கும் ஏதோவொரு தகவலை வைத்து இணையதளத்தில் தேடி, அந்த ஊரின் காவல்நிலையத்தை அணுகி முகவரியைப் பெறுவோம். குடும்பத்தினர் நேரே வந்து கூட்டிச் செல்வார்கள். பல ஆண்டுகளாக திரும்பவே மாட்டார் என்ற அவநம்பிக்கையில் காரியம் செய்தவர்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறோம். ஆனந்தம் பொங்கி கண்ணீராக வழியும் அந்த நிமிடத்திற்காகத்தான் இதெல்லாம்” என்றார் உற்சாகமாக.


 

family rejoining



இதுவரை தமிழகம், கேரளாவில் இருந்து மட்டுமே 15 மாநிலங்களைச் சேர்ந்த 81 பேரை ஒரே வருடத்தில் அவர்களது குடும்பத்தினரிடம் சேர்த்திருக்கிறது Aspiring Lives அறக்கட்டளை. இதற்காக பணமோ, பொருளோ எதிர்பார்ப்பதில்லை. தன் மகளோடு மனநலம் குன்றியநிலையில், சென்னை லிட்டில் ஹார்ட்ஸ் காப்பகத்தில் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சர்ளாவையும் அவரது மகள் பின்கியையும், அவரது கணவரிடம் சேர்த்துள்ளது Aspiring Lives அறக்கட்டளை. சர்ளாவின் கணவர் சுனிலிடம் பேசியபோது, “சர்ளாவும் மகள் பின்கியும் உறங்குகிறார்கள். இன்று நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம். எல்லா வளமும் கூடிவருகிறது” என்றார் மகிழ்ச்சியான குரலில்.



 

family rejoining 2



ஃபாரிஹா ரியூனியன் விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட மணீஷ்குமார், “வடமாநிலங்களில் அறக்கட்டளைகள் வெறும் கண்துடைப்புக்காகவே செயல்படுகின்றன. நாங்கள் அப்படி இருந்துவிடக்கூடாது என்கிற பயமே இப்போதுவரை நேர்மையாக இயங்கச் செய்கிறது. நம் இந்திய அரசுக்கோ, காவல்துறைக்கோ, பொதுமக்களுக்கோகூட ரியூனியன் பற்றிய புரிதல் கிடையாது. அதனால் ஏற்படும் அலட்சியமே எங்களது பணிக்கு வேகத்தடை. இந்தியா மாதிரியான குடும்பச் சூழலுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு நாட்டிற்கு இது மிகப்பெரிய பின்னடைவு. இந்தியாவிலேயே ஃபாரிஹா மட்டுமே ரியூனியன் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்கிறாள் என்பதே அதற்கு உதாரணம்” என்றார் ஆதங்கத்துடன்.

 

family rejoining 3



இதுதொடர்பாக அரசுகளுக்கு என்ன கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டபோது, “மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போகிறவர்களை மீட்டு மனநலக் காப்பகங்களில் சேர்த்துவிடுவதே காவல்துறையினர்தான். ஆனால், அவர்களை காவலர்கள் ஒரு புகைப்படம்கூட எடுத்துக் கொள்வதில்லை. எந்தத் தரவுகளையும் பெற்றுக் கொள்வதுமில்லை. இது முறைப்படுத்தப் படவேண்டும். மேலும், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினரும் ஒரு இணைப்பில் இருக்கும்போது, தரவு பரிமாற்றம் கடினமானதாக இருக்காது. அதேபோல், மத்திய அரசு இந்தியா முழுமைக்குமான ரியூனியன் இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கினால், அது தொலைந்து போகிறவர்களைக் கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும்” என்று வலியுறுத்துகிறார்கள் இருவருமே.

குடும்பத்தைத் தொலைத்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, அவர்களது அன்பானவர்களின் அழகிய நினைவுகளும், நிமிடங்களும் சேர்ந்தே தொலைந்துபோகின்றன. அதை மீட்டெடுக்கும் Aspiring Lives அறக்கட்டளையின் முயற்சி பாராட்டுக்குரியது.



  

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.