Skip to main content

வெள்ளைக்காரனுக்கு சிம்ம சொப்பனமான ஜெகநாத ஐயருக்கு என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா? - சுதந்திர போரட்ட வரலாற்றின் அறியாத பக்கங்கள்

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

writer rathnakumar about freedom fighter Jagannath Iyer

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் ஜெகநாத ஐயர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"கமுதி கோட்டை போரில் இருந்து தப்பித்த ஜெகநாத ஐயர், பின்னாட்களில் சிவகங்கையில் வைத்து வெள்ளைகாரன் கையில் சிக்கினார். கமுதியில் இருந்து கிளம்பி சிவகங்கை வந்த ஜெகநாத ஐயர், மருது பாண்டியரோடு இணைந்து வேலை செய்துவந்தார். சிவகங்கை மன்னர் பெரிய உடையனத்தேவரை பிடிக்கும்போது ஜெகநாத ஐயரையும் வெள்ளைக்காரன் பிடித்துவிடுகிறான். அப்போதும் அவர்தான் ஜெகநாத ஐயர் என்று அவனுக்குத் தெரியாது. பின், யாரென்று விசாரிக்கையில்தான் தெரியவந்தது. 

 

விசாரணையின்போது ’நீதான் லூசிங்டன்னை கொலை செய்ய முயற்சித்தாயா’ என்று கேட்டபோது, அவன் என் கையில் இருந்து தப்பித்துவிட்டான் என்று கர்வமாக ஜெகநாத ஐயர் சொல்லியிருக்கிறார். பிடிபட்டுவிட்டோம் என்ற பயம் அவருக்கு துளியும் இல்லை என கர்னல் அக்னியூவ் பதிவுசெய்திருக்கிறான். அதன் பிறகு அவரை ராமநாதபுரம் கொண்டு செல்கின்றனர். பெரிய உடையனத்தேவர், ஜெகநாத ஐயர், ஷேக் உசைன் உள்ளிட்ட 72 பேரை கை, கால்களில் சுமக்க முடியாத அளவு விலங்கிட்டு சிவகங்கையில் இருந்து ராமநாதபுரம்வரை நடத்தியே அழைத்துவந்திருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் வைத்து ஆயிரம் கசையடிகள் கொடுத்திருக்கிறார்கள். அவருடன் இருந்த குமாரன், கண்ணன் அந்த கசையடியிலேயே இறந்துவிட்டார்கள். ஆனால், அத்தனை அடிகளையும் தாங்கிக்கொண்டு ஜெகநாத ஐயர் உயிரோடு இருக்கிறார். அதன் பிறகு எஞ்சியிருந்தவர்களை நாடு கடத்த முடிவெடுக்கிறார்கள். வெட்டிக்கொலை செய்தல், தூக்கில் போடுதல் என்றால் அந்த நிமிடம்தான் வலியிருக்கும். நாடு கடத்தல் என்றால் சாகும்வரை வலியை அனுபவிக்க வேண்டும். 

 

பின்னர், தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று நெல்சன் என்ற பழைய கப்பலில் பினாங்கிற்கு நாடு கடத்துகிறார்கள். இந்தச் சம்பவம் 1802 பிப்ரவரி 4இல் நடக்கிறது. கப்பலில் போகும்போதே சிலர் இறந்துவிடுகின்றனர். பெரிய உடையனத்தேவர், ஜெகநாத ஐயர், ஷேக் உசைன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும்தான் பினாங்கிற்கு உயிரோடு செல்கிறார்கள். அவர்களை அங்கிருந்த தகர பேக்டரியில் கொத்தடிமையாக வேலை செய்ய வைத்துள்ளனர். எலிக்கடியாலும் நாய் கடியாலும் பெரிய உடையனத்தேவர் இறந்துவிடுகிறார். ஜெகநாத ஐயர் எப்படி இறந்தார் என்பது இன்றுவரை தெரியவில்லை. 15 வயது பையனாக நாடு கடத்தப்பட்ட துரைச்சாமி என்ற பையன் மட்டும் அவனுடைய கடைசி காலத்தில் திரும்ப அனுப்பப்பட்டதாக சொல்கிறார்கள். பீரங்கி முன்னால் நிற்கவைத்து சிங்கம்செட்டியை கொன்றதுபோல நம்மையும் கொலை செய்திருக்கலாமே என்று நினைக்ககூடிய அளவிற்கு இவர்கள் பினாங்கில் சித்ரவதையை அனுபவித்திருக்கிறார்கள்". 

 

 

Next Story

5 ரூபாய்க்கு வேலைக்கு வந்தவர் ஆற்காட்டை கைப்பற்றியது எப்படி? - சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களை விளக்கும் ரத்னகுமார்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ராபர்ட் க்ளைவ் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”நான் ராபர்ட் க்ளைவின் மிகப்பெரிய ரசிகன். அலெக்சாண்டர், நெப்போலியன் போல ராபர்ட் க்ளைவும் வரலாற்று நாயகன். அடிதடி, வெட்டுக்குத்து எதற்கும் அஞ்சாதவன் ராபர்ட் க்ளைவ். ஹைதர் அலி வேகமாக முன்னேறுவதில் வல்லவர். மருதநாயகம் வியூகம் வகுப்பதில் வல்லவர். இந்த இரண்டையும் ஒருசேரப் பெற்றவர் ராபர்ட் க்ளைவ். வெறும் 500 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஆற்காட்டைப் பிடித்துக்காட்டியவர். 

 

இந்தியா பற்றிய அறிவை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில்தான் நான் கற்றுக்கொண்டேன் என்று  ராபர்ட் க்ளைவ் பதிவு செய்துள்ளார். அவர் இந்தியாவிற்கு வந்தபோது அவருடைய வயது 19. கிளர்க் வேலைக்காக வந்தவருக்கு 5 ரூபாய் சம்பளம். பின், சில காலம் குடோனில் கணக்குவழக்கு எழுதியுள்ளார். அதன் பிறகு ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில் புத்தகத்தைத் துடைத்து வைக்கும் வேலை பார்த்திருக்கிறார். 

 

அந்த நூலகத்தில் வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகம்தான் இருக்கும். கடுக்காய் மையைப் பயன்படுத்தித்தான்  வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அதை விருப்பு வெறுப்பு இன்றி உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை படித்துத்தான் இந்தியர்களை அடையாளம் கண்டதாக  ராபர்ட் க்ளைவ் பதிவுசெய்துள்ளார். வெறும் கிளர்க்காக பணியில் சேர்ந்த  ராபர்ட் க்ளைவ், ஆறு வருடங்களிலேயே லாரன்ஸ் ஸ்டிங்கர் மூலமாக ஆர்மி கேப்டனாகிவிடுகிறார்.  

 

திருச்சியில் ஆற்காடு நவாப் முகமது அலி சண்டை செய்துகொண்டு இருக்கிறார். அவருக்குப் பிரிட்டிஷ் ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. பிரெஞ்சு படைகள் சந்தா சாஹேப்பிற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருந்தன. அந்த சமயத்தில் பிரெஞ்சு படைகளை ஒப்பிடும்போது பிரிட்டிஷ் படைகள் சற்று பலவீனமாக இருந்தன. இந்த திருச்சி முற்றுகையில் சந்தா சாஹேப் தோல்வியடைகிறார். அதற்கு முக்கிய காரணம் ராபர்ட் க்ளைவ் வகுத்த நேர்த்தியான போர் வியூகம்தான். 

 

இந்தச் சண்டையின்போது பிரெஞ்சு படைகள் வலுவுடன் இருந்ததால் சந்தா சாஹேப்பை தாக்க வேண்டுமா என்று பிரிட்டிஷுக்கு யோசனை இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்தான், சந்தா சாஹேப்பை வீழ்த்த இங்குதான் அடிக்க வேண்டும் என்றில்லை; ஆற்காட்டிலும் அடிக்கலாம் என்று யோசனை கூறுகிறார். ஆற்காட்டுக் கோட்டையில் சந்தா சாஹேப்பின் மொத்த குடும்பமும் இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்வுக்கு 30 வயதுக்குள்தான் இருக்கும். பிரிட்டிஷ் உயரதிகாரிகள் அந்த யோசனையை ஏற்கவில்லை. நான் செய்துகாட்டுகிறேன், எனக்கு ஒருநாள் அவகாசமும் 500 பேரும் கொடுங்கள் என ராபர்ட் க்ளைவ் கேட்டுள்ளார். தான் சொன்னது போலவே 500 பேரோடு சென்று ஒரு குண்டைக்கூட வெடிக்கச் செய்யாமல் ஆற்காட்டைக் கைப்பற்றிக்காட்டினார் ராபர்ட் க்ளைவ்”.     

 

Next Story

”’கருங்காலிப் பயலே’னு திட்டுறோமே, அதன் அர்த்தம் தெரியுமா?” - உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ரத்னகுமார்

Published on 16/06/2022 | Edited on 22/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கருங்காலி என்ற சொல்லுக்கான பெயர்க்காரணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"தோகத்தி மரத்தைத்தான் கருங்காலி மரம் என்று அழைப்பார்கள். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் தோகத்தி கருமை நிறத்தில் இருக்கும். அந்த மரத்தை அரிவாள் கொண்டு வெட்டவே முடியாது. கருங்காலி மரக்கட்டை கோடாலி, ஈட்டி, வேல் கம்பு செய்வதற்குப் பயன்படும். அந்தக் கட்டையை பாறையில் அடித்தால்கூட உடையாது, தெறிக்காது. 

 

கருங்காலிப் பயலே என்று சிலர் திட்டி கேட்டிருப்போம். அதற்கு என்ன காரணம்? தற்போது கருங்காலி மரம் வெட்ட நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் காலத்தில் கருங்காலியை வெட்ட வேண்டுமென்றால் கோடாரியைத்தான் பயன்படுத்துவார்கள். கோடாரி வலிமையாக இருக்க வேண்டுமென்பதால் கருங்காலி கட்டையில்தான் அதன் கைப்பிடி செய்யப்பட்டிருக்கும். கருங்காலி கட்டையில் செய்யப்பட்ட கோடாரி கருங்காலி மரத்தை வெட்டவே பயன்படுவதால், தன்னுடைய இனத்தை காட்டிக்கொடுப்பவனை குறிப்பிட கருங்காலி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கருங்காலி என்பதற்கான பெயர்க்காரணம் இதுதான்".