Skip to main content

இப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு...  ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது? வெளிவராத தகவல்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

"இப்ப தெரியுதா மோடிஜி ஏன் தமிழர்களையும், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், திருவள்ளுவரையும் தூக்கிப் பிடிக்கிறார் என்று. கொஞ்சம் கொஞ்சமாக இந்து மத சாயம் பூசத்தான் இப்படி எல்லாம் செய்து வருகிறார்'' -இப்படிக் கேட்பது கிராமத்து டீக் கடையில் இருந்து தினசரி பத்திரிகையை படித்துக்கொண்டிருந்த வயது முதிர்ந்த விவசாயி. அவர் சொல்வதிலும் முற்றிலும் உண்மைகள் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. 
 

bjp



தாய்லாந்து மொழி'யில் திருக்குறளை வெளியிட்ட அடுத்தகணமே திருவள்ளுவருக்கு பா.ஜ.க. இணையதளத்தில் காவி பூசப்பட்டு பட்டையும், கொட்டையும் சார்த்தப்படுகிறது. அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டியில் கிராம மக்களால் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் குவிக்கப்பட்டனர். சிலை சரிசெய்யப்பட்டது. சிலை அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தஞ்சை தமிழ்ப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். சிலையை அவமதித்த நபரை விரைவில் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் வழக்கம்போல யாரையும் பிடிக்கவில்லை. (போராட்டங்கள் வலுப்பெற்றால் கடைசியில் ஒரு சைக்கோ செய்தான் என்று வழக்கு முடித்து வைக்கப்படும் என்பது வேறு)

 

dk



இந்த நிலையில்தான் 6-ந் தேதி தஞ்சை ராஜராஜன் சதய விழாவிற்கு தலைவர்கள் வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். அந்த வகையில்தான் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்த கையோடு தனது ஆதரவாளர்கள் சிலருடன் பிள்ளையார்பட்டிக்குச் சென்றார். திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, உத்திராட்ச மாலை அணிவித்து, திருநீறு பூசி, தீபாராதனை காட்டினார். அந்த நேரத்தில் கீழே நின்றவர்கள் "ஓம் காளி... ஜெய் காளி' என்று கோஷங்களை எழுப்பி திருவள்ளுவரை காவிகளின் தலைவராக்கினார்கள்.

 

bjp



திருவள்ளுவருக்கு காவி அணிவித்த பிறகு ராஜராஜன் அடக்கம் செய்யப்பட்ட இடமாக சொல்லப்படும் உடையாளூர் சென்று மாலை அணிவித்துவிட்டு, வெளியே வந்தபோது வல்லம் டி.எஸ்.பி. சீதாராமன் தலைமையிலான போலீசார் அர்ஜுன் சம்பத், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோரை கைதுசெய்து தஞ்சை பல்கலைக்கழக காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அதற்குள் பல இடங்களில் இருந்தும் போலீசாருக்கு நெருக்கடி.


இந்த நிலையில்தான் பிள்ளையார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்ஜுன் சம்பத், குருமூர்த்தி, கார்த்திக் ராவ் உள்ளிட்ட 3 பேர் மீதும் கலகம் செய்யத் தூண்டுதல், மத, இன, மொழி, சாதி, சமயம் தொடர்பான விரோத உணர்வுகளைத் தூண்ட முயற்சி செய்தல், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இத்தனை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தாலும் பல நெருக்கடிகளால் சிறைக்கு அனுப்ப வேண்டியவரை அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்த போது... 20-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனச் சொல்லி அனுப்பினார்கள்.

 

Seshan


 

வெளியே வந்த அர்ஜுன் சம்பத், "காலங்காலமாக திருவள்ளுவரை இப்படித் தான் பார்த்தோம். அதன்படியே நாங்களும் வழிபட்டோம். எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால்தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். இந்நிலையில்... பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை மீதான காவி அடை யாளம் அகற்றப்பட்டு சிலையைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தி.க. தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழ்நாட்டில் தேசியம், திராவிடம், தமிழ்த் தேசியம் என்று அரசியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் திருவள்ளுவரை தமிழராக மட்டுமே பார்க்கிறார்கள். அதனால்தான் இதுவரை எந்த அமைப்பும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால் பா.ஜ.க. மதச்சாயம் பூசி இந்துவாக்க நினைக்கிறது.


ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது? என்ற நமது கேள்விக்கு, சாமானிய மக்கள் சொல்லும் பதில்... பா.ஜ.க. கால் ஊன்ற முடியாத நிலையில் அந்த இடங்களில் இப்படி "இந்து' என்கிற மதச் சாயத்தை தூண்டிவிட்டு அதன்மூலம் கால்ஊன்ற நினைப்பது வழக்கம். அதாவது கட்சிகள் மாறி இருந்தாலும் பலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களைக் கவர்ந்து தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்துவிடும் என்பதற்காகத்தான் இப்படிக் கிளப்பி விடுகிறது.

அதுபோலத்தான் இப்ப திருவள்ளுவரை கடவுள் ஆக்கிவிட்டால், அதை தமிழகத்தில் உள்ள திராவிட, தமிழ்த் தேசிய கட்சிகள் எதிர்க்கும். அந்தச் சந்தர்ப்பத்தில் "இந்து கடவுளை எதிர்க்கிறார்கள்' என்று பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்று எதிர்க்கும் கட்சிகளில் உள்ள கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம்.

ஆனால் தமிழ்நாட்டில் அது எடுபடாது. தாமரையை மலர வைக்க வள்ளுவர் உதவமாட்டார் என்பதை அவர்கள் உணரவில்லை. இதற்கு அ.தி.மு.க. அரசும் துணைபோகிறது. அதனால்தான் அமைச்சர் பாண்டியராஜன், "திருவள்ளுவர் இந்து என அவர்கள் சொல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் சிலுவை போட்டாலும், இஸ்லாமியர்கள் தொப்பி அணிவித்தாலும் நாங்கள் ஏதும் சொல்வதற்கில்லை'' என்றார்.

பிள்ளையார்பட்டி வள்ளுவர் சிலைக்கு காவி கட்டி, உத்திராட்ச மாலை அணிவித்த அர்ஜுன் சம்பத் வகையறாக்கள், சிதம்பரம் நடராஜர் சிற்றம்பலத்தில் திருக்குறளையோ, தேவாரத்தையோ பாட முடியுமா? இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தர்மமா? எனக் கேட்கிறார்கள் தமிழக பக்தர்கள்.

 

Ayodhya



 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.